இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் பெண்ணுக்கு வாக்குரிமை


திருச்சி பகுதியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நளினி என்ற பெண்ணுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அன்னை ஆசிரமம் எம்.எம் நடுநிலைப்பள்ளியில் அவர் தனது முதல் வாக்கினைச் செலுத்தினார்.

அது பற்றி நளினி கூறியதாவது, 

இலங்கையில் எங்களுக்கான பிறப்புச் சான்றிதழில் இந்தியத் தமிழர் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இலங்கையில் வழங்கப்படும் அடையாள அட்டையில், இந்தியர் என்பதற்காக எக்ஸ் என்றும் குறிப்பிட்டிருப்பார்கள்.

அதனால் அங்கு வாக்குரிமை இல்லாத நிலையில், இங்கு வந்து 40 ஆண்டுகள் ஆகியும் அந்த உரிமை இல்லாமல் முடங்கி கிடந்தோம். அதில் எனக்கு மட்டும் வாக்குரிமை கிடைத்துள்ளது. முகாமில் உள்ள அனைவருக்கும் இந்திய குடியுரிமை கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் தான் இருக்கிறோம். மத்திய அரசும், மாநில அரசும் எங்கள் எதிர்பார்ப்பை கவனத்தில் கொண்டு குடியுரிமை வழங்க வேண்டும்.

எனது தாத்தா, பாட்டி இந்தியாவில் பிறந்தவர்கள். எனது அப்பா, அம்மா இலங்கையில் பிறந்த இந்திய வம்சாவளியினர். ஆனால் நான் இந்தியாவில் ராமநாதபுரத்தில் தான் பிறந்தேன்.

இதன் அடிப்படையில், நான் இந்திய பிரஜை என்பதற்கான ஆவணங்கள் வேண்டும் என நீதிமன்றத்தை நாடி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விண்ணப்பித்து போராடினேன். இறுதியாக, எனக்கு இந்திய குடியுரிமைக்காக கடவுச்சீட்டு வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில், நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் போராடி வாக்குரிமையைப் பெற்றேன்” என்றார்.

No comments