யாழில் பேருந்தில் கையடக்க தொலைபேசிகளை திருடி வந்தவர்கள் கைது!


யாழ்ப்பாணத்தில் பேருந்துகளில் பயணம் செய்பவர்களை இலக்கு வைத்து கையடக்க தொலைபேசி திருட்டில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, நான்கு இலட்சம் ரூபாய் பெறுமதியான 8 கையடக்க தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளது. 

 பேருந்தில் பயணம் செய்பவர்களின் தொலைபேசிகள் திருட்டுப் போவது சம்பந்தமாக தொடர்ச்சியான முறைப்பாடுகள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பட்டு வந்த நிலையில், யாழ்ப்பாண பொலிஸ் குற்றதடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.  

விசாரணைகளின் அடிப்படையில்,  யாழ்ப்பாணம் புறநகர் பகுதிகளை சேர்ந்த வண்ணார் பண்ணை, பிரப்பங்குளம் சிவலிங்கபுளியடியை சேர்ந்த 24, 31 மற்றும் 33 வயதுடையவர்களை கைது செய்தனர். 

சந்தேக நபர்களிடம் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் 8 கையடக்க தொலைபேசிகளை மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments