யாழில். புதிய மதுபான சாலைகள் அமைக்க கூடாது என்ற கோரிக்கை நிராகரிப்பு


யாழ்ப்பாணத்தில் புதிய மதுபான சாலைகளை அமைக்க அனுமதி வழங்க கூடாது என வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் வைத்த கோரிக்கை, ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது. 

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் புதன்கிழமை இடம்பெற்றது. 

அதன் போது , தெல்லிப்பழையில் புதிதாக மதுபான சாலை ஒன்றினை அமைக்க முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும் , அதற்கு பொது மக்கள் எதிர்ப்பு காட்டி வருவதாகவும் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டது. 

அதன் போது , அவைத்தலைவர் , யாழில் புதிதாக எந்த மதுபான சாலைக்கும் அனுமதி வழங்க கூடாது என ஒரு தீர்மானத்தை கூட்டத்தில் நிறைவேற்றுமாறு கோரிக்கை வைத்தார். 

நியதிகளின் அடிப்படையில், யாழ்ப்ப்பாணத்தில், கள்ளு தவறணைகள் உட்பட 146 மதுபான சாலைகளுக்கான அனுமதிகளை வழங்க முடியும். எனவே யாழ்ப்பாணத்தில் எத்தனை உள்ளது என பரிசீலித்த பின்னரே புதியதற்கு அனுமதி வழங்க முடியுமா இல்லையா என தீர்மானிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவை தலைவரின் கோரிக்கை கூட்டத்தில் தீர்மானமாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. 

No comments