வடக்கில் இருந்த 50 வைத்தியர்கள், 20 தாதியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்


வட மாகாணத்தில் ஒரு வருடத்தில் 50 வைத்தியர்களும் 20 தாதியர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வட மாகாண சுகாதார பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

வவுனியா வைத்தியசாலையில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

வட மாகாணத்தில் ஒரு வருட காலப்பகுதியில் 50 இற்கும் அதிகமான வைத்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். இவர்களில் வெளிநாட்டு கல்விக்காக சென்று வராதவர்களும் உள்ளனர். அத்துடன் 20 தாதியர்களும் வெளியேறியிருக்கின்றனர்.

வைத்தியர்களும், தாதியர்களும் வெளியேறுவது எமக்க ஒரு சவாலான விடயம். அத்துடன் அண்மைக்காலத்தில் கொவிட் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இங்கு ஆரம்பிக்கப்பட வேண்டிய தாதிய பயிற்சிகள் ஆரம்பிக்கப்படவில்லை. 

இவ்வருடம் தாதிய கல்லூரியில் படித்து வெளியேறுபவர்கள் இருந்தாலும் எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு தாதிய பயிற்சிகள் இடம்பெறாத நிலை காணப்படும். ஆகவே இந்த பகுதிக்கு புதிய தாதிகள் வரமாட்டார்கள். இதனால் நாம் சிக்கலான சவாலை எதிர்கொள்வோம்.

அத்துடன் வெளிநாடுகளில் தாதிகளை வரவேற்பதனால் அவர்கள் வேலையை முடிவுறுத்தி வெளியேறலாம். எனவே எதிர்வரும் காலம் சவாலை எதிர்கொள்ளும் காலமாக அமையும் என்றார்.

No comments