தமிழர்களின் வரலாற்று அடையாளச் சின்னங்கள் பறிபோகின்றன


தமிழர்களின் வரலாற்று அடையாளச் சின்னங்கள் பறிபோய்க் கொண்டிருக்கின்ற சூழலில் அதனைப் பாதுகாக்க வேண்டியது அவசியம்.தவறினால் வரலாறுகள் புனையப்பட்டு அழிக்கப்படும் நிலைமை ஏற்படும் என  சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி செஞ்சொற்செல்வர் ஆறுதிருமுருகன் தெரிவித்துள்ளார். 

நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாசல் திறப்பு விழா நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

மேலும் தெரிவித்ததாவது..

நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாசல் புனரமைக்கப்பட்டது போன்று ஏனைய வரலாற்று மரபுரிமைச் சின்னங்களும் புனரமைக்கப்பட்டு அவை அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும்.

குறிப்பாக இங்குள்ள மந்திரி மனையை அடையாளப்படுத்தி காப்பாற்றுவது போன்று ஏனைய வரலாற்று அடையாளச் சின்னங்களையும் அடையாளப்படுத்த வேண்டும்.

இன்றைக்கு தமிழர்களின் அடையாளச் சின்னங்கள் எல்லாம் பறிபோகிறது. எனவே வரலாற்று அடையாளங்களை நாங்கள் சரியாக போடாவிட்டால் அதை புனைந்து அழிக்க நெருங்கி விடுவார்கள்.

இவ்வாறு எமது பாரம்பரிய வரலாற்று அடையாள சின்னங்களை பாதுகாக்க யாழ் பல்கலைக்கழக சமூகம் காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

எங்கள் அடையாளச் சின்னங்கள் எங்கிருந்தாலும் கல்வெட்டுக்கள் போடுங்கள். அதைவிடுத்து எதுவும் இல்லாமல் அது இது என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

மேலும் எங்கள் பாரம்பரிய அடையாளங்களை சொல்வதற்கு எம்மவர்களிடத்தே பொறுமை இல்லை. அந்த பொறுமையை அனைவரும்  வளர்த்துக் கொள்ள வேண்டும் என மேலும் தெரிவித்தார்.


No comments