இளைஞனின் தாக்குலுக்கு இலக்காகி யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற முதியவர் உயிரிழப்பு!


இளைஞனின் தாக்குதலுக்கு இலக்காகி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற முதியவர் , பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியை சேர்ந்த செல்வரத்தினம் ஹரிச்சந்திரன் (வயது 66) என்பவரே உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாண நகர மத்தி பகுதியில் ஓடுகள் விற்பனை செய்யும் கடையொன்றினை உயிரிழந்த முதியவர் நடாத்தி வந்திருந்தார். அவரிடம் ஓடு வாங்கிய இளைஞன் ஒருவர் , மிகுதி பணத்தினை வழங்காது காலம் கடத்தி வந்துள்ளார். 

அந்நிலையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இளைஞனுக்கும் முதியவருக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதில் , இளைஞன் முதியவரை தாக்கியுள்ளார். 

தான் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற முதியவர் , பொலிஸ் நிலையத்தினுள் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். 

முதியவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் , முதியவரை தாக்கிய இளைஞனை பொலிஸார் கைது செய்து , பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

அதேவேளை கடந்த வாரம் இளைஞர் ஒருவர் உயிர்மாய்த்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளிக்க சென்ற மூதாட்டி ஒருவரும் பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments