மக்கள் தேர்தல் மற்றும் அரசியல் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர்


நாட்டு மக்களில் பெரும்பாலானோர் தேர்தல் மற்றும் அரசியல் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் இடம்பெற்ற ‘2023/ 2024 தேசிய சட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், 

நாடாளுமன்றத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்தாலும் 50 வீத பலத்தை பெற்றுக்கொள்ள முடியாது.

எனவே தேர்தலுக்காக ஒன்றுபடுவதை விடுத்து பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்க சகலரும் ஒன்றுபட வேண்டியது அவசியம்.

தற்போதும் இந்நாட்டு மக்களில் பெரும்பாலானோர் தேர்தல் மற்றும் அரசியல் மீது நம்பிக்கை இழந்துள்ளனர்.

சட்டம் மற்றும் ஒழுங்கு, அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட்டிருப்பதால் நெருக்கடியிலிருந்து இலங்கை முற்றாக மீண்டு விட்டது. இந்தச் செயன்முறையின் வெற்றிக்கு எதிர்காலத்தில் பாரிய அர்ப்பணிப்புக்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

மேலும், தேசிய சட்ட மாநாட்டில் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டம் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்து ஆராயப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

எவ்வாறாயினும் தற்போது சட்டம் ஒழுங்கு, அரசியல் பொருளாதார ஸ்திரத்தன்மையும் உருவாகியுள்ளது. இந்த நிலைமை குறுகிய காலத்திற்குரியது என்பதால் நாம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது என்பதை உணர வேண்டும்.

முன்னொருபோதும் காணாத வகையிலான சவாலை இந்நாட்டின் பொருளாதாரம் கடந்த பத்து மாதங்களுக்கு முன்பாக கண்டிருந்தது.

இருப்பினும் சட்டம் ஒழுங்கு, அரசியல் பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை நாம் அர்ப்பணிப்புடன் முன்னெடுத்திருந்தாலும் நாடு நெருக்கடியிலிருந்து முழுமையாக மீண்டுவிட்டதென கூற முடியாது என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். 

No comments