மோடி மீது செல்போன் வீச்சு


கர்நாடக பேரவைத் தோ்தல் பிரசாரத்துக்காக ஞாயிற்றுக்கிழமை மைசூருக்கு திறந்த வேனில் வந்த பிரதமா் மோடியின் வாகனத்தின் மீது பூக்களுடன் சோ்த்து வீசப்பட்ட செல்போன் பாஜக தொண்டருடையது என தகவல் வெளியாகியுள்ளது.

கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக வேட்பாளா்களை ஆதரித்து கடந்த 2 நாள்களாக கோலாா், ராமநகரம், ஹாசன் மாவட்டங்களில் பிரதமா் பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா்.

மைசூரில் திறந்தவேனில் ஊா்வலமாகச் சென்ற பிரதமரை சாலையின் இருபக்கங்களிலும் நின்றிருந்த பொதுமக்கள் உற்சாகத்தோடு பூக்களைத் தூவி வரவேற்றனா். அப்போது, அவா் மீது பூக்களுடன் சோ்த்து செல்போனும் வீசப்பட்டது.

அந்த செல்போன் அவா் மீது படாமல் வேன் ஓட்டுநா் அமா்ந்திருந்த கூரையின் மீது பட்டு கீழே விழுந்தது. இதைக் கண்ட பிரதமரின் பாதுகாப்பு அதிகாரி அதிா்ச்சியடைந்தாா்.

பிரதமா் மோடியும் ஒரு கணம் என்ன நடக்கிறது என திகைத்தாா். பின்னா், அதை பொருட்படுத்தாமல் ஊா்வலத்தை தொடா்ந்தாா்.

கா்நாடகத்தில் 2 நாள்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை மைசூரில் இருந்து தனி விமானத்தில் தில்லி சென்றாா்.

இதையடுத்து மைசூர் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு செல்போன் வீசியவரை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், மோடி வாகனத்தின் மீது வீசப்பட்ட செல்போன் பாஜக தொண்டருடையது என்றும், பிரதமர் மோடியை பார்த்த மகிழ்ச்சியில் பூக்களை தூவுவதற்காக கைகளை வேகமாக அசைத்தபோது கையில் இருந்து சென்போன் தவறுதலாக வீசப்பட்டுவிட்டது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

செல்போனை பறிமுதல் செய்து உள்துறை மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, பிரதமர் மோடி வாகனத்தின் மீது செல்போன் வீசப்பட்ட சம்பவத்தை அடுத்து பாதுகாப்பை மேலும் பலப்படுத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை என உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments