யாழில். சீரற்ற காலநிலை தொடரும் - மின்னல்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்


யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக சீரற்ற காலநிலை நிலவி வருவதனால் யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 22 குடும்பங்கள் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் என். சூரியராஜ் தெரிவித்துள்ளார். 

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 

யாழ்ப்பாணத்தில் 22 குடும்பங்களை சேர்ந்த 79 பேர் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர். சாவகச்சேரி , மருதங்கேணி , ஊர்காவற்துறை மற்றும் கோப்பாய் பிரதேச செயலக பிரிவுகளில் வசிப்போரே பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர். 

சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஏற்பட்ட மினி சூறாவளி காரணமாக 16 குடும்பங்களை சேர்ந்த 56 பேர் பாதிக்கப்பட்டு உள்ளத்துடன் 15 வீடுகள் பகுதிகளவில் சேதமடைந்துள்ளன. 

ஊர்காவற்துறை பகுதியில் மின்னல் தாக்கம் காரணமாக ஐந்து குடும்பங்களை சேர்ந்த 19 பேர் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர். அவர்களின் வீடுகளில் உள்ள மின் உபகரணங்கள் பல மின்னல் தாக்கத்தினால் பழுதடைந்துள்ளன. 

கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் மழை காரணமாக வீடொன்றில் மின் ஒழுக்கு ஏற்பட்டமையால் , வீட்டில் இருந்த ஐவர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த சீரற்ற கால நிலை ஒரு வார கால பகுதிக்கு தொடர்வதற்கான சாத்தியங்கள் காணப்படுவதனால் , மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக மின்னல் தாக்கங்கள் அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதனால் , இடி , மின்னல் நேரங்களில் மின் சாதனங்களை மின் இணைப்பில் இருந்து அகற்றி வைக்க வேண்டும் என்பதுடன் மின்னல் நேரங்களில் தொலைபேசி உரையாடல்களையும் தவிர்த்துக்கொள்ளுங்கள் என தெரிவித்தார். 

No comments