பெண் யாசகரின் கைக்குழந்தையை அபகரித்த கும்பல்


பெண் யாசகரிடமிருந்து ஒன்றரை வயது கைக்குழந்தை ஒன்றை மூவரடங்கிய குழுவொன்று அபகரித்துச் சென்றுள்ளது.

பெண்ணொருவரும் ஆண்கள் இருவருமே குறித்த யாசகரிடமிருந்து கைக்குழந்தையை பலவந்தமாக பிடுங்கி, முச்சக்கர வண்டியொன்றில் ஏறி சென்றுள்ளனர்.

பம்பலப்பிட்டியவில் உள்ள நிறுவனம் ஒன்றுக்கு முன்பாக யாசகம் கேட்டுவந்த பெண்ணிடம் இருந்த கைக்குழந்தையே இவ்வாறு அபகரித்துச் செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அந்த பெண் யாசகர் பம்பலப்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டில், .முச்சக்கரவண்டியில் வந்திறங்கிய மூவரடங்கிய குழு, குழந்தைக்கு ஆடைகளை வாங்கி தருவதாகக் கூறி, என்னையும் குழந்தையையும், முச்சக்கரவண்டியில் ஏற்றிக்கொண்டு தெமட்டகொடை பிரதேசத்துள்ள ஆடை விற்பனை நிலையத்துக்குச் சென்றனர்.

அங்கு முச்சக்கரவண்டிக்கான வாடகை கட்டணத்தை செலுத்தி முச்சக்கரவண்டியை அனுப்பி வைத்தனர்.

பு​டவை கடைக்குச் சென்றவர்கள் சுமார் 1,900 ரூபாய்க்கு ஆடைகளை குழந்தைக்காக கொள்வனவு செய்தனர்.
அதனை குழந்தைக்கு உடுத்திவிட்டதன் பின்னர்.
அங்கிருந்து மற்றுமொரு முச்சக்கரவண்டியில் ஏறி, கொம்பனி வீதிக்கு வந்தனர்.

அங்குள்ள ஹோட்டல் ஒன்றுக்கு முன்பாகவிருக்கும் வாகன தரிப்பிடத்துக்கு முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்று முச்சக்கரவண்டியில் இருந்த பெண், கைக்குழந்தை தன்னிடம் தாருமாறும் தான் தூக்கிக்கொண்டு வருவதாகவும் என்னிடம் கேட்டுக்கொண்டார்.

எனினும், அதற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை.
அப்போது அப்பெண்ணுடன் வந்திருந்த ஆண், என்னை தாக்கி முச்சக்கரவண்டியில் இருந்து கீழே தள்ளிவிட்டு, கைக்குழந்தையுடன் தப்பிச் சென்றனர் என குறித்த பெண் யாசகரினால் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments