இராணுவம் பதிலளிக்கவேண்டும்!



இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டு, பின்னர் காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் எழிலன் உள்ளிட்ட மூன்று முன்னாள் போராளிகளை நீதிமன்றில் ஆஜராக்குமாறு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

அவ்வாறு அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த முடியாமல் போனால், அதற்கான காரணத்தை இலங்கை இராணுவம் நீதிமன்றிற்கு அறிவிக்க வேண்டும் எனவும் நீதிபதி நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

இறுதிக்கட்ட யுத்தத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்த எழிலன் என்றழைக்கப்படும் சின்னத்துரை சசிதரன், கந்தம்மான் என்றழைக்கப்படும் பொன்னம்பலம் கந்தசாமி , கொலம்பஸ் என்றழைக்கப்படும் உருத்திரமூர்த்தி கிருஸ்ணகுமார் ஆகியோர் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பு நேற்று வழங்கப்பட்ட போதே நீதிபதி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர் இராணுவத்திடம் சரணடைந்தமைக்கான சான்றுகள் இருப்பதில் மன்று திருப்தியடைந்து, அவர்கள் இராணுவத்தினரின் வசம் இருக்கலாம் அல்லது காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் என்ற தொனியில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

அத்துடன் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவும் அல்லது அப்படி முடியாது போனால் அதற்கான காரணங்களை விளக்கவும் எதிர்வரும் மாதம் 22 ஆம் திகதிக்கு வழக்குகள் திகதியிடப்பட்டுள்ளன.

ஆட்கொணர்வு மனுமீதான கட்டளை இலங்கை இராணுவத்தினருக்கு எதிரானதாக ஆக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகப்பெரிய வெற்றி. ஏனெனில் 2009 ஆம் ஆண்டு தொடக்கம் தங்களுடைய உறவினர்களை தேடி வந்த பயணம் 2013 இல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு 9 வருடங்களுக்க பின்னர் பூரணமாக நிறைவடைந்துள்ளது. 

இலங்கை இராணுவத்தினர் இதற்கான காரணத்தினை சொல்லியே  ஆகவேண்டும் எனவும் பொறுப்புக்கூறல் அவர்களை சார்ந்தது எனவும் பொறுப்புக்கூறலை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என சிரேஸ்ட சட்டத்தரணி எஸ். இரட்ணவேல் சுட்டிக்காட்டியிருக்கிறார்.






No comments