கடலை விற்கவில்லை?:டக்ளஸ்!

 


இலங்கையில் நிலவும் பொருளதார நெருக்கடியை பயன்படுத்தி வடக்கு கடலை இந்திய மீனவர்களிற்கு தாரை வார்க்கும் அரசின் முயற்சி எதிர்ப்பலைகளை தோற்றுவித்துள்ளது.

இலங்கை மீனவர்கள் இலங்கை மற்றும் இந்திய மீனவர்களிற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் இந்தியக் கடற்றொழிலாளர்கள் வடக்கு கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதற்கான அனுமதிகளை வழங்குவது தொடர்பான தீர்மானங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்றொழிலாளர்களை பாதிக்கும் வகையிலான தீர்மானங்கள் எதுவும் மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

குறுகிய சுயலாப நலன்களுக்காக சில தரப்புக்கள் தவறான செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பி வருவதாக கடற்றொழில் அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

"கடந்த காலங்களில் சீனாவினால் கடலட்டைப் பண்ணைகள் அமைக்கப்படுவதாக கிளப்பிவிடப்பட்ட புரளிகள் தோற்றுப் போன நிலையில், இந்திய கடற்றொழிலாளர்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கப்போவதாக கதைகளை கூற ஆரம்பித்துள்ளார்கள்.

அதேவேளை, இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய எல்லை தாண்டிய சட்டவிரோத தொழில் முறைமையை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் எந்தவிதமான சமரசத்திற்கும் இடமில்லை." எனவும்; டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.


No comments