கட்டைப்பிராயில் வீடு உடைத்து திருட்டு ; சந்தேகநபர்கள் இருவர் கைது!


யாழ்ப்பாணம் , இருபாலை - கட்டைப்பிராய் பகுதியில் வீடொன்றினை உடைத்து 16 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த 17ஆம் திகதி கட்டைப்பிராய் பகுதியில் உள்ள வீடொன்றில் ஆட்கள் அற்ற நேரம் வீட்டினை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் வீட்டில் இருந்த 16 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். 

விசாரணைகளின் அடிப்படையில் நாயன்மார்கட்டு பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இருவரை சந்தேகத்தில் கைது செய்து அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , களவாடப்பட்ட நகைகளை மீட்டுள்ளனர். 

அத்துடன் இருவரும் போதைப்பொருளை அடிமையானவர்கள் என்றும் , போதை பொருட்களை வாங்குவதற்கான பணத்திற்காகவே களவில் ஈடுபட்டதாக தமது விசாரணைகளில் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

No comments