தென்னாபிரிக்காவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவுசெய்தது இலங்கை!


மகளிர் ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் முதல் லீக் போட்டியில், இலங்கை மகளிர் அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

நியூலேண்ட்- கேப்டவுணில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை குழு ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற இப்போட்டியில், இலங்கை அணியும் தென்னாபிரிக்க அணியும் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 129 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, அணித்தலைவி சமரி அத்தபத்து 68 ஓட்டங்களையும் விஸ்மி குணரத்ன 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சில், இஸ்மெயில், காப் மற்றும் நாடின் டி கிளார்க் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 130 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய தென்னாபிரிக்க அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 126 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், இலங்கை மகளிர் அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சுனே லூஸ் 28 ஓட்டங்களையும் சினாலோ லாரா வோல்வார்ட் 18 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில், இனோகா ரணவீர 3 விக்கெட்டுகளையும் சுகந்திகா குமாரி மற்றும் ஒஷதி ரணசிங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகியாக, 50 பந்துகளில் 12 பவுண்ரிகள் அடங்களாக, 68 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட சமரி அத்தபத்து தெரிவுசெய்யப்பட்டார்.

No comments