நாம் தேர்தலை எதிர்கொள்ள தயார்!


அரசாங்கத்திடம், அரச உத்தியோகஸ்தர்களுக்கு சம்பளம் கொடுக்கவே நிதியில்லை. இந்த நிலையில் நிதியினை தேடி தேர்தல் நடாத்த தயார் என்றால் தேர்தல் ஆணைக்குழு தேர்தலை நடத்தட்டும் , நாம் தேர்தலை எதிர்கொள்ள தயார் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் புதன்கிழமை ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

தேர்தல் தினத்தினை தீர்மானிப்பது , தேர்தலை நடாத்துவதா ? இல்லையா ? என தீர்மானிப்பது , தேர்தல் செலவுக்கான பணத்தினை எங்கிருந்து பெற்றுக்கொள்வது என தீர்மானிப்பது போன்றவை தேர்தல் ஆணைக்குழுவின் கடமையாகும்.

தற்போது எமது நாட்டை கொண்டு நடாத்துவதற்கே பணம் இல்லை. அரச உத்தியோகஸ்தர்களுக்கு சம்பளம் வழங்க , பாடசாலை மாணவர்களுக்கு சீருடை ,கல்வி உபகரணங்கள் வழங்க பணமில்லை. 

அது மட்டுமின்றி அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மற்றும் போக்குவரத்து சேவைகள் உள்ளிட்ட சேவைகளின் செலவு சமாளிக்க முடியாத நிலை காணப்படுகிறது. வீதிகளை புனரமைக்க என எதற்கும் நாட்டில் நிதியில்லை.

இவ்வாறான நிலையில் தேர்தலை நடாத்த , தேர்தல் செலவுக்கான நிதியினை திரட்டி தேர்தலை நடாத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்தால் , அந்த தேர்தலை எதிர்கொள்ள நாங்கள் தயாராகவே உள்ளோம் என்றார். 

No comments