கூட்டில் இருந்து சி.வி. மற்றும் மணி அணி வெளியேறினர்!


தமிழ் கட்சிகளின் கூட்டிற்கான சின்னம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக சி.வி விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் யாழ்.மாநகர சபை முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் தலைமையிலான அணி என்பன கூட்டத்தில் இருந்து வெளியேறியுள்ளது. 

தமிழ்த் தேசியக் கட்சிகள் உள்ளிட்ட தரப்புகள் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கூட்டணியொன்றை அமைக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்றைய தினம்  வெள்ளிக்கிழமை கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ, த.சித்தார்த்தன் தலைமையிலான புளொட், மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ், என்.சிறிகாந்தா தலைமையிலான தமிழ் தேசிய கட்சி, யாழ் மாநகர முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் தலைமையிலான அணி, ஜனநாயக போராளிகள் கட்சிஎன்பன புதிய கூட்டணியாக உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்ளவதற்கான கூட்டணியை உருவாக்கும் நோக்குடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருகின்றனர். 

இந்நிலையில் யாழில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் , கூட்டணிக்கான சின்னத்தை அறிவிப்பதில் இழுபறிகள் காணப்பட்டன. அது தொடர்பில் இணக்கம் எதுவும் ஏற்படாத நிலையில், தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் மணிவண்ணன் தரப்பு வெளியேறியுள்ளனர். 

"தற்போது சில முடிவுகள் இணக்கம் காணப்பட்டாலும் சில முடிவுகளில் இணக்கம் காணப்படவில்லை. மேலும் கட்சி உறுப்பினர்களுடன் பேசி இறுதி முடிவு எடுக்கப்படும்" என மணிவண்ணன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். 

இதேவேளை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பித்தளை விளக்குச் சின்னத்தில் போட்டியிடுவது என ஏனையவர்கள் இணக்கம் கண்டுள்ள போதிலும், அதனை சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் மணிவண்ணன் தரப்பு ஏற்காது கூட்டத்தில் இருந்து வெளியேறியதாக உள்ளக தகவல்கள் மூலம் அறிய முடிகிறது. 

No comments