7 கடல் மைல் நீந்தி தமிழகம் சென்ற அகதி!!


24 அகவையைக்கொண்ட இலங்கைத் தமிழர் ஒருவர் பாக்கு நீரிணையில் ஏழு கடல் மைல் தொலைவை நீந்தி தனுஷ்கோடியை அடைந்துள்ளார்.

அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை தனுஷ்கோடியை அடைந்ததாக தெ ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஹசன் கான் என்ற அஜய் என்பவரே தமிழக கரைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தம்மையும் ஐந்து பேர் கொண்ட குடும்பத்தையும் சட்டவிரோதமாக தமிழகத்திற்கு ஏற்றிச் சென்ற படகு மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியபோது தாம் கடலில் குதித்ததாக அவர் தமிழக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் இருந்து கானும் ஐந்து பேரைக்கொண்ட குடும்பம் ஒன்றும் சட்டவிரோதமாக இந்தியாவுக்கு புறப்பட்டுள்ளனர்.

அரிச்சல்முனைக்கு அருகிலுள்ள ஐந்தாவது தீவு அருகே சென்றபோது, நடுக்கடலில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றது.

இதன்போதே தாம் படகில் இருந்து கடலில் குதித்ததாக கான் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் அவருடன் படகில் வந்ததாக கூறப்படும் ஐந்து பேர் கொண்ட குடும்பத்தினர் கடந்த வெள்ளிக்கிழமை மண்டபம் கரைக்கு வந்தபோது, அவர்களுக்கு தமது படகில் இருந்து கடலில் குதித்த கான் தொடர்பில் எதுவும் தெரிந்திருக்கவில்லை.

இதற்கிடையில் ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் குறித்த இளைஞர் நீந்திக் கொண்டிருந்ததைக் கண்டு, கரையோரக் காவல்துறைக்கு அறிவித்த நிலையில் அவரைக் கரைக்கு அழைத்து வந்தனர்.

கானின் அறிக்கையின்படி, அவரது பெற்றோர் புதுச்சேரியில் உள்ள அகதிகள் முகாமான குத்துப்பட்டில் வசித்து வந்தனர்,

வேறு சில உறவினர்கள் ராமநாதபுரத்தில் வசித்து வந்தனர்.

பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் வாழ முடியாததால், தீவு தேசத்தை விட்டு தனது பெற்றோருடன் சேர்ந்து தமிழகத்திலோ அல்லது புதுச்சேரியிலோ வாழ்வதற்காக தாம் படகில் புறப்பட்டதாக கான்,விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அவரின் அடையாளத்தை சரிபார்க்க இந்திய காவல்துறையினர், இலங்கை காவல்துறையினரின் உதவியை நாடியுள்ளனர்.

தற்போது மண்டபம் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கான், சரிபார்ப்பு செயல்முறை முடிந்ததும், கடந்த மார்ச் முதல் சுமார் 175 ஏதிலிகள் தங்கியுள்ள மண்டபம் புனர்வாழ்வு முகாமின் அதிகாரிகளிடம் அவர் ஒப்படைக்கப்படுவார் என்று தமிழக செய்திகள் தெரிவித்துள்ளன.

No comments