குருந்தூர்மலைக்கு பேரம்



குருந்தூர்மலையில் கட்டப்பட்ட பௌத்தவிகாரையை அனுமதிப்பதற்கு பதிலீடாக தமிழ் மக்களது ஒரு தொகுதி காணிகளை விடுவிப்பதென பேரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய பேரத்தில் பௌத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க கலந்துரையாடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய விவசாயம் மற்றும் ஏனைய நடவடிக்கைகளுக்காக அளவீடு செய்யப்பட்ட காணிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளை உரிய நிறுவனங்களுடன் இணைந்து மக்களுக்கு வழங்குமாறு தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுக்கு அமைச்சர் விதுர விக்ரமநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற தடையினை மீறி கட்டப்பட்ட விகாரை விவகாரம் அரசிற்கு தலையிடியை தந்துள்ள நிலையில் தமிழ் மக்களது தடுக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க ஏதுவாக விகாரை அமைப்பு வேலைகள் தொடர்பில் கண்டுகொள்ளாதிருக்க கோரப்பட்டுள்ளது.

இதனிடையே எதிர்வரும் வாரம் அரச அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ச மற்றும் டக்ளஸ் தேவானந்தா இருவரும் குருந்தூர்மலைக்கு பயணிக்கவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  


No comments