ஒரு தலைக்காதல் கொலை:ஒருவர் கைது!



வவுனியா, நெடுங்கேணி பகுதியில் கடந்த 18 ஆம் திகதி இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 21 வயது யுவதி ஒருவர் மரணமடைந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நெடுங்கேணி, பகுதியில் வீட்டில் இருந்த 21 வயது யுவதி ஒருவர் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த போது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் உயிரிழந்திருந்தார்.

கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் உயிரிழந்த பெண் வசித்து வந்த நெடுங்கேணி பிரதேசத்தில் யுவதியின் வீட்டிற்கு அருகில் உள்ள வீடொன்றில் வசிக்கும் 29 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த யுவதி சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நெடுங்கேணி, சிவா நகர் பகுதியைச் சேர்ந்த துரைராஜசிங்கம் பிரமிளா (21 வயது) என்ற யுவதியே மரணமடைந்த வராவார்.

உயிரிழந்த யுவதி தனது தந்தையுடன் வீட்டில் வசித்து வருவதாகவும், அவரது தாயார் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

கொலைக்கான காரணத்தை கண்டறிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், உயிரிழந்த யுவதி மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் தொலைபேசி இலக்கங்களின் தரவு அறிக்கையை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்திய பின்னர் எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

No comments