அம்பாறையில் 61வது நாள் போராட்டம் முன்னெடுப்பு!


தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் உரிமையை' வலியுறுத்தி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் 100 நாள் செயல் முனைவுப் போராட்டத்தின் 61 ஆவது நாள் நிகழ்வுகள் இன்று காலை (30) வாழைச்சேனை பிரதேசத்தின் சுங்காங்கேணி கிராமத்தில்  நடைபெற்றது.

குறித்த போராட்டத்தில்  சூழலியல் நீதிக்கான மக்கள் கூடல் அமைப்பின்  இணைப்பாளர் த.கிரிசாந் கலந்து கொண்டு வடக்கு கிழக்கில் வாழும் மக்களுக்கு கௌரவமானதும் நியாயமான ஒரு அரசியல் உரிமை கிடைக்கப் பெற வேண்டும் என்பதை ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு தாழ்மையுடன் கோரிக்கையாக முன்வைக்கின்றோம்.

அந்த வகையில் எதிர்காலத்தில் சமூக அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக கௌரவமான ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து நிற்கிறோம்  எனக் கேட்டுக்கொண்டார்.

குறித்த போராட்டத்தில் பிரதேச மக்கள் தங்கள் பகுதியில் எதிர்நோக்கி வரும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

கணவனால் கைவிடப்பட்டோர்களது வாழ்வாதார விடயங்கள்,குடியிருப்பு காணி இல்லாமை,வீடில்லா பிரச்சினை,வீதி புணருத்தாரனம், விவசாயம்,மீன் பிடி தொழில்களில் எதிர்நோக்கும் பிரச்சினை என பல்வேறுபட்ட விடயங்களை முன்வைத்து கௌரவமான அரசியல் உரிமையை வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். நிகழ்வின் இறுதியில்  ஊடகங்களின் வாயிலாக ஜனாதிபதியின் கவனத்திற்கு தெரியப்படுத்தும் முகமாக கோரிக்கை அடங்கிய மகஜர் வாசிக்கப்பட்டது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் நெறிப்படுத்துனர் கண்டுமணி லவகுசராசா தலைமையில் வடக்கு கிழக்கில் உள்ள மாவட்டங்கள் அனைத்திலும் சுழற்சி முறையில் 100 நாட்கள் செயல் முனைவு போராட்டமானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில் சிவில் அமைப்புக்கள் இளைஞர் யுவதிகள் மற்றும் பிரதேச மக்கள் கலந்து கொண்டனர்.

No comments