உக்ரைன் பிரதேசங்கள் ரஷ்யாவுடன் இணைப்பு: ஐ.நா மற்றும் அமெரிக்கா கண்டனம்!!


உக்ரைனில் ரஷிய படைகள் வசம் உள்ள கெர்சன் மற்றும் ஜாபோர்ஜியா ஆகிய இரண்டு பிராந்தியங்களையும் சுதந்திர பிரதேசங்களாக அங்கீகரிக்கும் அதிகாரபூர்வமான ஆணையில் அதிபர் புதின் நேற்று கையெழுத்திட்டார்.

தெற்கு உக்ரைனில் அமைந்துள்ள ஜபோரிஜியா மற்றும் கெர்சன் பகுதிகளின் மாநில இறையாண்மை மற்றும் சுதந்திரத்தை அங்கீகரிக்க நான் உத்தரவிடுகிறேன், என்று அதிபர் புதின் ஆணையில் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனில் ரஷிய படைகள் வசம் உள்ள லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கெர்சன் மற்றும் ஜாபோர்ஜியா ஆகிய 4 பிராந்தியங்களை அதிகாரபூர்வமாக தன்னுடன் இணைத்து கொள்ள ரஷியா முடிவு செய்துள்ளது. இன்று ரஷிய தலைநகர் மாஸ்கோவில் கிராண்ட் கிரெம்ளின் அரண்மனையின் ஜார்ஜிய மண்டபத்தில் 15:00 மணிக்கு ரஷியாவில் புதிய பிரதேசங்களை இணைத்தல் தொடர்பான கையெழுத்திடும் விழா நடைபெறுகிறது.

இதுதொடர்பாக அந்த 4 பிராந்தியங்களை சேர்ந்த மக்களின் விருப்பத்தை தெரிந்து கொள்ள ரஷியா அங்கு பொதுவாக்கெடுப்பை நடத்தியது. கடந்த 23-ந் தேதி தொடங்கி கடந்த திங்கள்கிழமை வரை இந்த வாக்கெடுப்பு நடந்தது.4 பிராந்தியங்களிலும் பெரும்பாலான மக்கள் ரஷியாவுடன் இணைவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதைதொடர்ந்து உக்ரைனின் இந்த 4 பிராந்தியங்களையும் அதிகாரபூர்வமாக ரஷியாவுடன் இணைத்து கொள்வது தொடர்பான நிகழ்ச்சி இன்று ரஷிய அதிபர் மாளிகையில் கோலகலமாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷிய அதிபர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க நான்கு பிராந்தியங்களின் தலைவர்கள் ரஷிய தலைநகரில் கூடியுள்ளனர். அப்போது ரஷிய அதிபர் புதின் பொதுமக்களிடையே உரையாற்றுவார் எனத் தெரிகிறது.

இது சட்டவிரோத நில அபகரிப்பு நடவடிக்கை - அமெரிக்கா

உக்ரைனில் ரஷியா கைப்பற்றிய பிராந்தியங்களை அதிகாரபூர்வமாக தங்கள் நாட்டுடன் இணைத்து கொள்ள ரஷியா முடிவு செய்துள்ளதை 'நில அபகரிப்பு' நடவடிக்கை என்று அமெரிக்கா விமர்சித்துள்ளது.

அமெரிக்க உள்துறை செயலாளர் ஆனடனி பிளிங்கன் பேசுகையில்:- 

சர்வதேச சட்டங்களின் படி ரஷியாவின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது. உக்ரைனில் ரஷிய படைகள் வசம் உள்ள லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கெர்சன் மற்றும் ஜாபோர்ஜியா ஆகிய 4 பிராந்தியங்களை அதிகாரபூர்வமாக தன்னுடன் இணைத்து கொள்வதை அமெரிக்கா ஒருபோதும் அங்கீகரிக்காது என்று தெரிவித்தார்.

ஐ.நா கண்டனம்

உக்ரைனின் பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைக்கும் திட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.ரஷியாவின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்று உலக நாடுகள் தெரிவித்து வருகின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் குட்டரெஸ் ரஷியாவிற்கு விடுத்துள்ள எச்சரிக்கை பதிவில், ரஷியாவின் நடவடிக்கைகள் உக்ரைனின் பிராந்தியத்தில் அமைதியை பாதிக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் கூறுகையில், "இந்த ஆபத்தான தருணத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் சாசனங்களை நிலைநிறுத்த பொதுச்செயலாளர் என்ற முறையில் எனது கடமையை நான் அடிக்கோடிட்டுக் காட்ட வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் தெளிவாக உள்ளது. ஒரு தேசத்தின் பிரதேசத்தை அச்சுறுத்தல் அல்லது பலத்தைப் பயன்படுத்துவதன் விளைவாக வேறொரு தேசம் தன்னுடன் இணைக்கும் நடவடிக்கையானது, ஐ.நா.வின் சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தின் கோட்பாடுகளை மீறும் நடவடிக்கையாகும்" என்று தெரிவித்தார்.

No comments