ஏதிலிகளாகச் சென்றவர்களில் இருவர் புழல் சிறையில் அடைப்பு


இலங்கையில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர்கள் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் ஆகிய பிரிவுகளில் இவர்கள் தேடப்பட்டு வந்தனர்.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் 22ம் திகதி முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தனுஷ்கோடி வழியாக அகதிகளாக தமிழகம் வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஆகஸ்ட் 21ஆம் திகதி இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் இந்தியக் கடலோரப் பகுதிக்கு வந்திருப்பதாக தகவல் கிடைத்ததும், கடலோரக் காவல் படையினர் இலங்கைத் தமிழர்களை மீட்டு மரைன் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

தமிழகத்துக்கு தப்பிச் சென்றவர்களிடம் இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரகுமார் என்ற நபர் பிரபல நகைக்கடையை உடைத்து கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. ஆள் கடத்தல் மற்றும் கொலை வழக்கில் அவர் பிணையில் வெளியில் இருப்பதும் தெரியவந்தது.

யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த கிருபாகரன் என அடையாளம் காணப்பட்ட மற்றொரு நபரும் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு இலங்கையில் தேடப்பட்டு வருகிறார்.

இதைத்தொடர்ந்து, இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் தேடப்படும் குற்றவாளிகள் இருவரும் அகதிகளாக வாழ்வதாக இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் தமிழக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

No comments