திருமண நிகழ்வுகள்: 600 பேருக்கு வாந்தி!!




கண்டி- அம்பிட்டிய பிரதேசத்தில் உள்ள பிரதான ஹோட்டல் ஒன்றில்  நடைபெற்ற பல திருமண நிகழ்வுகளில் கலந்து கொண்ட  சுமார் 600 பேர் திடீரென சுகவீனமடைந்த சம்பவம் தொடர்பில் கங்கவத்தகோரல உள்ளூராட்சி சபையின் சுகாதார பிரிவினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன் அந்த​ ​ஹோட்டலில் மூன்று திருமண விழாக்கள் நடந்ததால் அந்த மூன்று திருமண விழாக்களிலும் கலந்து கொண்ட சுமார் அறுநூறு பேர் வாந்தி, பேதி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார்  மற்றும் அரசாங்க மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டது.

கண்டியைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவரின் குடும்பஸ்தர் ஒருவரின் திருமண வைபவமும் குறித்த ஹோட்டலில் இடம்பெற்றதுடன் திருமணம் முடித்த தம்பதியினர் தேனிலவுக்காக வெளிநாடு சென்றிருந்த நிலையில் அங்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் கங்காவத்தகோரல உள்ளுராட்சி சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரிடம் வினவிய போது, ஹோட்டலில் சாப்பிட்டவர்களுக்கு ஒருவித ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாகவும், ஹோட்டல் நீரால் ஒவ்வாமை ஏற்பட்டிருக்க கூடுமென  சந்தேகிப்பதால், ஹோட்டலின் நீர் மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக பேராதனைப்  பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த சம்பவங்கள்  இடம்பெற்று சில நாட்களின் பின்னர் சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளமையினால் விசாரணைகளை முன்னெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.

No comments