அரசியலாளர்களுக்கு வாக்குமூலம்:பொதுமக்களிற்கு கைது!



அமைச்சர்களான பந்துல குணவர்தன, பிரசன்ன ரணதுங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஆகியோரை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 09 ஆம் திகதி மற்றும் அதற்குப் பின்னரான காலப்பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் எரிப்பு மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பான விசாரணைகள் தொடர்பிலேயே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதனிடையே கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள், சொத்துக்கள் மற்றும் அலுவலகங்களைத் தாக்கி, எரித்து, அழித்த மூன்று சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, லசந்த அழகியவன்ன மற்றும் அருந்திக பெர்னாண்டோ ஆகியோரின் சொத்துக்களை சேதப்படுத்தியமை தொடர்பிலேயே இந்த மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஹோகந்தர, கிரிந்திவெல மற்றும் தங்கொடுவ ஆகிய பகுதிகளில் வசிக்கும் 37, 43 மற்றும் 45 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு, மாலம்பே மற்றும் தங்கொடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

No comments