மின் துண்டிப்பு வேளை வருகின்றனர்?



ஆயுதத்துடன் வந்த சீருடையினர், தன்னை விசாரிப்பதாக கூறி விரட்டி உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக கல்முனை மாநகர சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் சாமுவேல் சந்திரசேகரம் ராஜன் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை முன்வைத்துள்ளார்.

கல்முனையில் அமைந்துள்ள மனித உரிமை ஆணைக்குழு காரியாலயத்தின் இணைப்பாளர் ஏ.சி.அப்துல் அசீஸ் அவர்களிடம் அவர் இம்முறைப்பாட்டினை நேற்றைய தினம் கையளித்துள்ளார்.

அவரால் மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கடந்த 2 ஆம் திகதி இரவு மின்தடை நேரம் பெரிய நீலாவணையிலுள்ள எனது வீட்டுக்கு வந்த ஆயுதம் தரித்த நான்கு இராணுவத்தினரும் தங்களை கொழும்பு புலனாய்வுப் பிரிவினர் என்று அடையாளப்படுத்திய இருவரும் விசாரிக்க வந்ததாகக் கூறினர். கொழும்பிலிருந்து வந்த புலனாய்வுப் பிரிவினர் என்று அவர்கள் கூறியமையால் அவர்களிடம் அவர்களது உத்தியோக அடையாள அட்டையை கேட்டேன். ஆனால், அவர்கள் அடையாள அட்டையைத் தர மறுத்தனர்.

நான் கல்முனையில் உண்ணாவிரதமிருந்தமை தொடக்கம் கடந்த மாதம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வரை நான் சம்பந்தப்பட்ட விடயங்களில் என்னை துருவித்துருவி விசாரித்தனர். இறுதியில் வெளியில் நடமாடக் கூடாது என்று அச்சுறுத்தியதோடு, எனக்கும் மனைவி பிள்ளை மற்றும் மருமகனுக்கும் பயமுறுத்தி அச்சுறுத்தல் விடுத்துச் சென்றுள்ளனர்.


இதற்கு முன்னும், 2018ம் ஆண்டு உள்ளுராட்சித் தேர்தலின் போதும், 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போதும், 2020ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போதும் இனந்தெரியாத ஆயுத குழுக்கள், பொலீசார், புலனாய்வுக் குழுவினர் எனப் பலரும் தொடர்ச்சியாக அடுத்தடுத்து வந்து என்னை விரட்டினர். தற்போது மீண்டும் இவ்வாறாக அச்சுறுத்தலை மேற்கொண்டுள்ளனர்.

இதனால் எனக்கு மனித உரிமையுடன், சுதந்திரமாக வாழமுடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. எனக்கு வாக்களித்த மக்களுக்கு உதவ முடியாத நிலையில் உள்ளேன். சமுகசேவை செய்யத் தடை ஏற்பட்டுள்ளது. உளவியல் ரீதியான தாக்கம் அதிகமாக உள்ளது. எனது குடும்பத்தினரும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனது உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் பயபீதியுடன் நடைப்பிணமாக என் குடும்பத்துடன் காலம் கடத்திவருகிறேன்.

இது தொடர்பாக எமது அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.கலைஅரசன் அவர்களிடமும் விடயங்களைத் தெரியப்படுத்தியுள்ளேன். எனவே இவர்கள் யார் என்பதை அடையாளம் கண்டு எனக்கு உரிய நீதியைப் பெற்றுத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

No comments