குருந்தூர் மலை தொடர்பான வழக்கு 30 ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டது

முல்லைத்தீவு - குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில், காவல்துறையிடம் விளக்கம் கோரிய வழக்கு எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டுத் தலமான முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்


மலையில் கடந்த 12 ஆம் திகதி, புத்தர் சிலை ஒன்றினை நிறுவுவதற்கும், அங்கு நீதிமன்ற கட்டளையை மீறி அமைக்கப்பட்ட விகாரையில் விசேட பௌத்த வழிபாடுகளை மேற்கொள்வதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதைத் தொடர்ந்து அந்த முயற்சிகள் கைவிடப்பட்டிருந்தன.

இதையடுத்து, குருந்தூர் மலை விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 16 ஆம் திகதி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது.

இதன்போது, வழக்குத் தொடுனரான காவல்துறையினர் குருந்தூர்மலையில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக இன்றைய தினத்துக்கு விசாரணையை திகதியிட்டிருந்தார்.

இந்த நிலையில் குருந்தூர்மலை தொடர்பான வழக்கு மீண்டும் இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் சார்பில் முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் சட்டத்தரணிகள் பதினோரு பேர் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்

அதேநேரம், காவல்துறை தரப்பில் விளக்கமளிப்பதற்காக கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதிக் காவல்துறைமா அதிபர் சமுத்திர ஜீவ, முல்லைத்தீவு மாவட்ட பொறுப்பதிகாரி கெலும் சி திலகரத்ன, முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பொறுப்பான உதவிக் காவல்துறை அத்தியட்சகர் லசந்த விதானகே, முல்லைத்தீவு மாவட்ட தலைமை காவல்துறை பரிசோதகர் அமரசிங்க உள்ளிட்டவர்கள் மன்றில் முன்னிலையாகி விளக்கமளித்தனர்.

இந்த வழக்கில் குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகம் சார்பாக நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணிகளில் ஒருவரான எஸ்.தனஞ்சயன் கருத்து தெரிவிக்கையில், மன்றில் முன்னிலையான காவல்துறையினர், பூரண விளக்கமளிக்க முடியாத சூழல்நிலையில் இருப்பதாகவும், மேலதிகமாக தமக்கு விளக்கமளிப்பதற்கும் கால அவகாசம் தேவை என்றும் கோரியிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், அவர்கள் முன்வைத்த கருத்துக்களுக்கு தங்கலால் எதிர்க் கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டதாக சட்டத்தரணி எஸ்.தனஞ்சயன் தெரிவித்துள்ளார்.

சமர்ப்பணங்களை அவதானித்த நீதவான், வழங்குத் தொடுனர் தரப்பான காவல்துறை, இந்த வழக்கில் தங்களுடைய நிலைப்பாடு தொடர்பில் மீள நீதிமன்றில் பதிலளிப்பதற்காக, வழக்கு விசாரணைகளை இந்தமாதம் 30 ஆம் திகதிக்கு திகதியிட்டுள்ளதாகவும் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

No comments