போராட தயார் :முன்னணி சார்பில் மணிவண்ணன்!


 

கொழும்பில் ஆட்சியை மாற்ற கோராமல் ஆட்சி கட்டமைப்பை மாற்ற கோரி போராடினால் நாமும் தெருத்தெருவாக இறங்கி போராட தயார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.

யாழ் மாநகரசபையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சமகால நிலைமைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே மாநகர முதல்வர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் கோரிக்கைகள் பதில் கிடைக்க வேண்டும். உலகம் முழுவதும் உள்ள அபிவிருத்தி அடைந்த நாடுகளில் பெரும்பாலும் சமஷ்டியே இருக்கின்றது. இதனை சிங்கள ஆட்சியாளர்களும் சிங்கள மக்களும் விளங்கிக் கொள்ள வேண்டும்.


ஐரோப்பாவில் உள்ள நாடாக இருக்கட்டும். வட அமெரிக்க நாடுகளாக இருக்கட்டும். அனைத்து நாடுகளும் தங்களுடைய ஆட்சி கட்டமைப்பாக சமஸ்டியையே கொண்டுள்ளது. அதனால்தான் அவர்கள் அபிவிருத்தி அடைந்திருக்கின்றனர். அதனை தென்னிலங்கை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.


புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து இங்கு காசு வந்தால் உடனடியாக பயங்கரவாத தடுப்பு பிரிவு போய் விசாரிக்கிறது. இவ்வாறு இருந்தால் எவ்வாறு வெளிநாட்டிலிருந்து பணம் இங்கு வரும். எல்லாவற்றையும் இனவாத கண்ணோட்டத்துடன் பார்க்க முடியாது.


ஏராளமான புலம்பெயர்ந்த மக்களையும் அமைப்புக்களையும் இலங்கையில் தடைசெய்யட்டுள்ளனர். அப்படி இருந்தால் எவ்வாறு அவர்கள் இங்கு முதலிடுவார்கள்.


ஆட்சி கட்டமைப்பும் அரசியல் யாப்பும் மாற்றப்பட வேண்டும். இனவாத செயற்பாடுகள் திருத்தப்பட வேண்டும். சிங்கள சகோதரர்கள் தங்கள் ஆட்சியாளர்களுக்கு அழுத்தங்களைக் கொடுத்து இனப்பிரச்சினையை தீர்க்க ஒத்துழைக்க வேண்டும்.


நான் பெரிது நீ பெரிது என்று தமிழ் அரசியல்வாதிகள் போராடுவதை விடுத்து எல்லோரும் சர்வதேச சமூகத்திடம் சர்வதேச நாணய நிதியம் போன்ற நிதி நிறுவனங்களிடம் ”இலங்கைக்கு நிதி உதவி செய்யப் போவதாக இருந்தால் தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமையை வழங்கி விட்டு செய்யுங்கள்” என்ற கோரிக்கையை வையுங்கள்


சிங்கள மக்கள் ஆட்சியை மாற்ற கோரி போராடி வருகிறார்கள். ஆனால் தமிழர் பகுதிகளில் இந்த போராட்டங்கள் பெரிய அளவில் இடம் பெறவில்லை. ஆனால் சிங்கள மக்கள் ஆட்சியை மாற்ற கோராமல் ஆட்சி கட்டமைப்பை மாற்ற கோரி போராடினால் நாமும் தெருத்தெருவாக இறங்கி போராட தயார் என்றார்.

No comments