யாழில் வெளிவருகின்றது அம்புலு!



தென்னிந்திய திரைப்படத்திற்கு ஈடாக ஈழத்தில் தயாரிக்கப்பட்டு வரும் அம்புலு" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளைய தினம் சனிக்கிழமை (8) யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே படக்குழு இதனை தெரிவித்தது.

முற்று முழுதாக பொழுது போக்கு சித்திரமாக தயாரிக்கப்பட்டுவரும் அம்புலு நிச்சயமாக கொரோனா மன அழுத்தத்தில் இருக்கும் மக்களிற்கு ஒரு ஆறுதலாக அமையுமென தயாரிப்பாளர் அஜீபன்ராஜ் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

தென்னிந்திய திரைப்படங்களிற்கு ஈழத்தமிழ் மக்கள் தாயகத்திலும் புலம்பெயர் தேசத்திலும் காண்பித்துவரும் ஆதரவை முற்றுமுழுதாக யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி எடுக்கப்படுகின்ற அம்புலு திரைப்படத்திற்கும் வழங்க அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஈழ கதைகளை முன்னிறுத்தி பலரும் திரைப்படங்களை தயாரித்து வருகின்ற நிலையில் தென்னிந்திய வர்த்தக பாட பாணியிலும் இங்கும் படங்களை தயாரிக்க முடியுமென நிரூபித்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.  

இதனிடையே அஜீபன்ராஜின் தயாரிப்பிலும் சுதர்சன் ரட்ணத்தினுடைய இயக்கத்திலும் உருவாகியுள்ள அம்புலு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மாலை 3 மணிக்கு யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் நடைபெறவுள்ளது.

ஆர்.வின்.பிரசாத்தின் இசையில் உருவாகியுள்ள பாடல்கள்  படத்துக்கு பலமாக அமையும் என்றும் இசை வெளியீட்டு விழாவுக்கு அனைவரையும் வருகை தர  படக்குழு அழைப்புவிடுத்துள்ளது.




No comments