பிரான்சில் இடம்பெற்ற தேசத்தின் குரல் அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியரும் அரசியல் ஆலோசகருமான தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 15 ஆவது ஆண்டு

நினைவேந்தல் நிகழ்வு நேற்று  19.12.2021 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணியளவில் பாரிஸ் நகரின் புறநகர்ப் பகுதியான பொண்டிப் பகுதியில் இடம்பெற்றது.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மாவீரர் பணிமனை மற்றும் பொண்டி தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடரினை பொண்டி தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.கலைச்செல்வன் அவர்கள் ஏற்றிவைத்தார்.

ஈகைச் சுடரினை 20.04.1998 அன்று வீரச்சாவடைந்த மேஜர் விடுதலையின் சகோதரி ஏற்றி வைத்தார்.

மலர் வணக்கத்தினை ஆனையிறவுச் சமரில் சாவடைந்த 2 ஆம் லெப். அருள்நந்தினி அவர்களின் சகோதரி செலுத்தினார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து அனைவரும் சுடர் வணக்கமும், மலர்வணக்கமும் செலுத்தினர்.

பொண்டி மாநகர முன்னாள் நகரபிதாக்களும் கலந்துகொண்டு தமது கருத்துக்களைப் பகிர்ந்திருந்தனர்.

தொடர்ந்து கருத்துரை வழங்கிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு. மேத்தா அவர்கள் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தொடர்பாகவும் இளையோர்கள் தேசத்தின் குரல் அவர்களின் மதிநுட்பத்தை அறிந்துகொள்ள வேண்டியது அவசிம் என்பதாகவும் பொண்டி நகரின் அரசியல் செயற்பாடுகள் தொடர்பாகவும் தெரிவித்திருந்தார். அத்தோடு தேசத்தின் குரல் அவர்களின் முக்கியம் வாய்ந்த உரையொன்றின் சிறுபகுதியும் ஒலிபரப்பப்பட்டது.

ஆர்ஜொந்தை தமிழ்ச்சோலை, சென்தனி தமிழ்ச்சோலை மற்றும் ஆதிபராசக்தி கலைப்பள்ளி மாணவியரின் எழுச்சி நடனங்கள், பேச்சு,கவிதை, தமிழர் கலைபண்பாட்டுக் கழகப் பாடகர்களின் மாவீரர் நினைவு சுமந்த பாடல்களும் சிறப்பு நிகழ்வுகளாக இடம்பெற்றன.

நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்து ஓய்ந்ததும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவடைந்தது.

No comments