திருமலை ஆயர், தென்கயிலை ஆதீனம் கூட்டாக கோரிக்கை!

தமிழ் தேசிய அரசியல் கட்சிகளது பொது இணக்கப்பாடு தொடர்பில் திருமலையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அதிவண. கலாநிதி. கி.நோயல்

இம்மானுவேல் ஆயர், திருகோணமலை மறைமாவட்டம். முற்றும் தவத்திரு. அகத்தியர் அடிகளார், தென்கயிலை ஆதினம், திருகோணமலை ஆகியோர் கூட்டாக விடுத்த வேண்டுகோளில்  

பின் முள்ளிவாய்க்கால் சமூக–அரசியல் வரலாற்று வெளியில், ஈழத்தமிழ் மக்கள் தங்கள் கூட்டுரிமையின் அடிப்படையில் அமைந்த கோரிக்கைகளை முன்வைத்து, மக்களாட்சி அறத்திற்குட்பட்டு, மக்கள் தங்கள் ஆணையை வலியுறுத்துவதற்கும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அக்கூட்டுக் கோரிக்கைகள் தொடர்பில் கருத்தொருமைப்பாட்டை வெளிப்படுத்தக்கூடிய, மக்களாட்சிக்குரிய வெளிப்படைத்தன்மையான வெளி இல்லாத சூழலில், அதற்கு மாற்றீடான சூழலை உருவாக்குவதற்கான வரலாற்றுத் தேவை உணரப்பட்டு விடுக்கப்பட்ட வேண்டுகோள்களின் அடிப்படையிலும், நிரந்தரமற்று அமைகின்ற குறிப்பிட்ட நோக்கத்தினை அடைவதற்காக உருவாக்கப்பட்டு பின்னர் கலைகின்ற தீர்வின் தற்காலிகத்தன்மையை, நிலையற்ற தன்மையை ஈடு செய்வதற்காகவும், அதற்குப் பொருத்தமான பொறிமுறைச் சட்டகத்தினை மக்களின் முன்மொழிவுகளினூடு கருத்துக்களைப் பெற்று உருவாக்குவதற்கான பொது முயற்சியினை, மக்கள்-மைய அணுகுமுறையின் முறையியலைக் கொண்டு தொடங்கி வைத்தோம். 

இவற்றிற்கான பரீட்சார்த்த செய்முறையின் முதற்கட்டம் நிறைவுற்ற நிலையில், இவ் பத்திரிகையாளர் மாநாட்டை கூட்டியுள்ளோம்.

பொறிமுறைச் சட்டகத்தை எண்ணிம படிம வெளிக்கூடாக, அனைவரும் பங்கேற்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை, முதற்கட்ட கலந்தறிதலில் வலுவான கோரிக்கையாக முன்வைக்கப்பட்டதையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றோம்.

எண்ணிம படிம வெளி, யதார்த்தமான ஒரு சூழலில், அனைவரும் பங்கேற்கக்கூடிய முறையில்,தமிழ் மக்களாட்சிச் செயற்குழுவின் கட்டமைப்புத் தொடர்பில் கடந்த 3ம் திகதி ஒக்டோபரில் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக மக்கள் எம்மேல் வைத்த நம்பிக்கையையும் பற்றுறுதியையும், நல்லெண்ணப் பொறுப்பையும் கருத்தில் கொண்டு, மக்கள் இலகுவாக தமிழ் மக்களாட்சிச் செயற்குழுவை அணுகத்தக்க முறையில் பொதுத் தொடர்புக் குழுவை அறிமுகம் செய்து ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் ஆலோசனைகளை பெறுவதற்கான நடவடிக்கைகளை தொடங்கி வைப்பது அவசியம் எனக்கருதுகின்றோம்.

தமிழ்த்தேசிய பரப்பெல்லை, தமிழ்த்தேசிய நாடாளுமன்ற உறுப்பினருக்கானகோட்பாட்டு ஏற்பு, சர்வதேச நீதிப் பொறிமுறை, இனப்படுகொலைக்கான நீதிக்கோரிக்கை,புலம்பெயர் சமூகம் தாயக ஈழத்தமிழ்க் குழுமத்தின் நீட்சி. சர்வதேச சமூகத்தை நோக்கி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைக்க வேண்டிய கோரிக்கைகள் இன்னும் பிற நிகழ்பாட்டுப் பிரச்சனைகளை மையப்படுத்தி, பல தள ஆலோசனைகளின் பின்னர் வினாக்கொத்தொன்று தயாரிக்கப்பட்டு மிக விரைவில் மக்கள் கருத்தைப் பெறுவதற்காக இணையத் தளத்தினூடு வினாக்கொத்து வெளியிடப்படும் என்பதையும் தெரிவிக்க விரும்புகின்றோம்.

இச்செயற்திட்டம் மக்கள்-மைய வினைத்திறன் கொண்டதாயிருப்பதால் மக்களின் பங்கேற்பு முக்கியமானதாகின்றது. மக்களாட்சித் தத்துவத்திற்கமைய மக்களை அதிகாரத்தை கொண்டவர்களாக வரைவிலக்கணப்படுத்தப்படுவதை அறியாமலில்லை. மேற்குறிப்பிட்டதின் நடைமுறைச் சாத்தியப்பாட்டை தமிழ்த்தேசிய எல்லைப்பரப்பில் யதார்த்தமாக்குவதற்குரிய முயற்சி இதுவாக வரலாற்றில் கணிக்கப்படும் என்பதை வரலாறு பதிவு செய்து கொள்ளும். மக்கள்-மையத்திலே தான் அதிகாரம்ஃசக்தி குவிந்துள்ளது. அவ்வதிகாரப் பகிர்வின் விளிம்புநிலை பிரதிநிதித்துவ செயலாண்மை முகவர்களாகவும், மக்கள் ஆணையை செயற்படுத்துபவர்களாகவும், மக்கள் பிரதிநிதிகள் விளங்குவதை மக்களாட்சியின் அடிப்படைப் பண்பாக இச்செயற்குழு கருதுகின்றது. மக்கள் ஆணையை பிரதிபலித்து பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய கடப்பாட்டை வலியுறுத்தி அதே நேரத்தில் பிரதிநிதித்துவப்படுத்தலை பிளவுபடுத்தாத, கூட்டாக வெளியுலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய கட்டாயத்தை மக்கள் உணர்ந்துள்ளார்கள். மக்களுக்கான பிரதிநிதிகளாக மக்களாட்சி முறையியலை மீளப் பெற்றுக்கொள்ளுதல் தற்போதைய செல்நெறியின்று மாறுபட்டு, பதிலீட்டு அணுகுமுறையாக அறிமுகப்படுத்தப்பட்டு செயற்படுத்தப்பட வேண்டும்.

மக்களாட்சி குழுவின் செயற்திட்டத்தை பொதுவெளியில் நின்று முன்னெடுப்பதற்காக முன்மொழியப்படுகின்ற பொதுத் தொடர்புக் குழுவின் இணைப்பாளராக சட்டத்தரணி திரு.விஜயகுமார் அவருடன் சேர்ந்து நான்கு சட்டத்தரணிகள் இணைந்து செயற்படுவார்கள்.

அவர்கள் எவ்வாறு எங்களால் முன்மொழியப்பட்டார்கள் போன்ற தரவுகள் முன்னைய ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக் செயற்பாட்டின் வினைத்திறன் மக்கள் பங்கேற்பிலேயே தங்கியுள்ளது என்பதை வலியுறுத்தி அதையே வேண்டுகோளாவும் கேட்டு தொடர்ந்து இணைந்து செயற்பட அழைத்து நிற்கின்றோம்.


No comments