காணாமல் போனோரை கொன்று விட்டனரா?

 


காணாமல் ஆக்கப்பட்டோருக்கு மரணச்சான்றிதழை வழங்க இலங்கை ஜனாதிபதி முன்வந்திருப்பதன் மூலம் அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனரென்பதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளாராவென கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிறேமசந்திரன்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துவெளியிட்ட அவர் இலங்கை ஜனாதிபதி ஜநா பொதுச் செயலர் உடனான சந்திப்பின் போது காணாமல் ஆக்கப்பட்டோருக்கு மரணச்சான்றிதழை வழங்க நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவித்துள்ளதாக ஊடக அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது..

முதலில் அவர் இலங்கை திரும்பியதும் இத்தகைய அறிவிப்பினை முதலில் திட்டவட்டமாக பகிரங்கமாக அறிவிக்கவேண்டும்.

இலங்கை அரசின் தகவல்படி கூட வடகிழக்கில் 16ஆயிரம் பேர் வரையில் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களில் பெருமளவிலானோர் இலங்கையின் முப்படைகளாலும் காவல்துறையாலும் பலர் பார்த்திருக்க கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர்.

காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளிற்கு நீதி வேண்டி கடந்த மூன்று வருடங்களிற்கு மேலாக உறவுகள் போராடிவருகின்றன.  

ஆனால் தனது ஆட்சிக்காலத்தில் அவர்களை ஒருமுறையேனும் பேச்சுக்கு அழைத்திராத இலங்கை ஜனாதிபதி உள்ளக பொறிமுறையில் பேச்சில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி ஜநா பொதுச்செயலரையும் சர்வதேசத்தையும் இதன் மூலம் ஏமாற்ற முற்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.

ஆனால் ஜநா பொதுச்செயலாளரோ அல்லது சர்வதேச சமூகமோ காணாமல் போனோவர்களிற்கு நடந்தமை பற்றி ஏதனையும் தெரியாமல் இருக்கவில்லையென்பதை முதலில் இலங்கை ஜனாதிபதி அறிந்திருக்கவேண்டுமெனவும் சுரேஸ்பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  

இலங்கை ஜனாதிபதி காணாமல் போனோர் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனரென்பதை பகிரங்கமாக முதலில் அறிவிக்கட்டும்.

அதன் பின்னராக நாம் சர்வதேசத்திடம் இலங்கை அரச படைகளால் அதன் காவல்துறையால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளமை பற்றி நீதியை கோருவோமெனவும் சுரேஸ்பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


No comments