திருகோணமலை ஈராகண்டியில் அவரசமாக தரையிறங்கிய விமானம்!


இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான பயிற்சி விமானங்களில் ஒன்றான செஸ்னா 150 என்ற விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக  இன்று திங்கள்கிழமை (07) திருகோணமலையில் நிலாவேலி கடற்கரைக்கு வடக்கே உள்ள ஈராகண்டி பகுதிகளில் அவசர அவசரமாக தரையிறங்கியதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

செஸ்னா 150 என்பது,   ஒரு பயிற்சி விமானமாகும்,  இது, விமானிக்கான அடிப்படை  பயிற்சியளிப்புக்காக பயன்படுத்தப்படுகிறது.

அந்த விமானம் இன்று (07) காலை 10:22 க்கு சீனா வளைகுடாவில் இருந்து புறப்பட்டு காலை 10:48 க்கு அவசர அவசரமாக தரையிறங்கியது.

சம்பவம் நடந்த நேரத்தில் இரண்டு விமானிகள் செஸ்னாவில் இருந்தனர், இருவரும் காயமடையவில்லை என்று இலங்கை விமானப்படை பேச்சாளரான குரூப் கெப்டன் துஷன் விஜேசிங்க தெரிவித்தார்.

இரு விமானிகளின் திறமையால் ஒரு பேரழிவு தவிர்க்கப்பட்டது என்று இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

எனினும், இது குறித்து விசாரணை நடத்த விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் சுதர்ஷனா பதிரண சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பணித்துள்ளார்.

No comments