பிக்குகள் சொகுசு வாகனங்களை மக்களுக்கு தானம் வழங்கட்டும்!



இந்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த எல்லா அரசாங்கங்களும், சிங்கள பௌத்த தேரர்களை தம்வசம் வைத்துக்கொள்ள, வழங்கிய பென்ஸ், டொயோடா போன்ற சொகுசு வாகனங்கள், சொகுசு வசிப்பிடங்கள் உட்பட்ட வசதிகளை, வரப்பிரசாதங்களை அள்ளி வழங்கியுள்ளன.அவற்றினை உடனடியாக பொதுகாரியங்களுக்காக  வழங்கி மக்கள் பணியினை ஆரம்பித்து வைக்க வண எல்லே குணவன்ச தேரருக்கு சவால் விடுத்துள்ளார் மனோகணேசன்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சம்பளத்தை பொது காரியங்களுக்காக அர்ப்பணிக்க வேண்டும் என வண எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.

இது பற்றி கருத்து வெளியிட்டுள்ள மனோகணேசன்;, உண்மையில் எனக்கு இந்த தேரர்  இதை போதிக்க  தேவையில்லை. 

1999 ம் ஆண்டிலிருந்து எனக்கு கிடைக்கும் சம்பளம், கொடுப்பனவுகள் எல்லாவற்றையும் நான் பொது காரியங்களுகாகவே அர்ப்பணித்துள்ளேன். 

அது மட்டுமல்ல, எனது சொந்த உழைப்பில் நான் சம்பாதித்த பல மில்லியன் பெறுமதியான சொத்துகளையும் நான் பொது காரியங்களுகாகவே விற்று செலவழித்துக்கொண்டு இருக்கின்றேன். 

நான் ஒருபோதும் பொது சொத்தை திருடியது கிடையாது. ஏனெனில் எனக்கு திருட தெரியாது. இதுதான் என் தந்தை எனக்கு சொல்லித்தந்து விட்டு போன பாடம்.

ஆனால், இந்நாட்டின் இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க மத தலைவர்களை விட, விசேட அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ள இந்த தேரர் உட்பட மிகப்பல பௌத்த தேரர்களுக்கு நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். 

கௌதம புத்தன் போதித்ததை போன்று, “கொலை இல்லை, திருட்டு இல்லை, பாலியல் உறவு இல்லை, பொய் இல்லை, போதைப்பொருள் இல்லை, மதிய உணவுக்குப் பிறகு சாப்பாடு இல்லை, நடனம், இசை இல்லை, நகைகள் ஒப்பனைப்பொருட்கள் இல்லை, எழுந்த படுக்கையில் தூக்கம் இல்லை, பணம் இல்லை” என்ற  பௌத்த துறவியின் எளிய துறவு வாழ்க்கையை வாழ உங்களால் முடியாவிட்டாலும் “பரவாயில்லை”. 

தேரர்களாகிய நீங்கள், “இன-மதவாத அரசியல் இல்லை” என்று வாழ்ந்தாலே போதும்..! இந்நாடு உருப்படும்..! என மனோகணேசன் தெரிவித்துள்ளார்.


No comments