ஆப்கானிஸ்தானுக்கு இராணுவத்தை அனுப்பத் தயாரகும் சீனா!


ஆப்கானிஸ்தானிலிருந்து எஞ்சியிருக்கும் அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறியவுடன், ஆப்கானிஸ்தானின் அண்டை நாடுகளில் ஒன்றான சீனா, அந்நாட்டிற்கு தனது அமைதிப்படையை அனுப்பலாம் என்று சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஆப்கானிஸ்தானில், தற்போது சுமார் 2500 அளவிலான எண்ணிக்கையில், அமெரிக்க துருப்புகள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தாண்டு செப்டம்பர் மாத வாக்கில், அந்த துருப்புகள் முழுவதும் விலக்கி கொள்ளப்படும் என்று ஜோ பைடன் அரசு அறிவித்துள்ளது.

எனவே, அப்படி அமெரிக்கப் படைகள் வெளியேறினால், தாலிபான் மீண்டும் பெரியளவில் தலைதூக்கும் என்று கூறப்படுகிறது. ஆப்கன் அரசுக்கு பெரிய சிக்கல் எழும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆப்கனில் அரசியல் ஸ்திரமற்ற நிலை மீண்டும் ஏற்பட்டால், அது தனது எல்லைப்பகுதியான ஜின்ஜியாங்கில் பெரிய பிரச்சினையை ஏற்படுத்தும் என்று சீனா கருதுவதாக கூறப்படுகிறது. எனவே, புதிய சிக்கல்கள் எழாமல் இருக்க, ஆப்கன் நாட்டிற்கு தனது அமைதிப் படையை சீனா அனுப்பலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.

கடந்த 2018ம் ஆண்டு, ஆப்கன் ராணுவத்திற்கு, சீன ராணுவம் பயிற்சியளித்தது குறிப்பிடத்தக்கது. அதில், மலை ராணுவப் பிரிவை உருவாக்கும் பயிற்சியும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

No comments