வேட்பு மனுவில் சிக்கலா! சட்ட ஆலோசனையில் சீமான்!


நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வரும் சட்டமன்றத் தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.இந்நிலையில்  கடந்த மார்ச் 15ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார். அந்த வேட்பு மனுவை வைத்துதான் இப்போது விவாதம் நடந்துகொண்டிருக்கிறது.

சீமான் தாக்கல் செய்துள்ள மனுவில் கடந்த நிதியாண்டுகளுக்கான தனது ஆண்டு வருமானத்தைக் குறிப்பிட்டிருக்கிறார். இதில் கடந்த 2019-20 ஆம் ஆண்டுக்கான வருட வருமாக ஆயிரம் ரூபாய் மட்டுமே என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதன் மூலம் சீமான் வருமானத்தை மறைத்துவிட்டதாக புகார்கள் எழுந்தன. ஆனால் சீமானின் நாம் தமிழர் கட்சி வட்டாரத்திலோ, “சீமானின் அபிடவிட்டில் 2019-20 ஆம் ஆண்டுக்கான ஆண்டு வருமானம் ஆயிரம் ரூபாய் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதுகுறித்து சீமானின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டிருக்கிறது. இது அனேகமான தட்டச்சுப் பிழையாக இருக்கலாம். இதையடுத்து சீமான் தனது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்து வருகிறார்” என்று தெரிவித்தனர்.

வேட்பு மனு தாக்கல் செய்வதில் அனுபவம் பெற்ற சில அரசியல் பிரமுகர்களிடம் பேசினோம்.

“சீமானின் வேட்பு மனுவில் கடந்த ஆண்டு வருமானம் ஆயிரம் ரூபாய் என்பது நம்பும்படியாக இல்லைதான். அவர் தாக்கல் செய்திருக்கும் சொத்து மதிப்பினை ஒப்பிட்டுப் பார்த்து இது மதிப்பிடப்படும். எனினும் அவர் பிழையாக மனுவில் குறிப்பிட்டிருந்தால் கூட இப்போது பிரச்சினை இல்லை.

வேட்பு மனு பரிசீலனை வரும் மார்ச் 20 ஆம் தேதி நடக்கிறது. அதற்குள் தேர்தல் அலுவலரை சந்தித்து வேட்பு மனுவில் ஏதேனும் பிழையிருந்தால் அதைத் திருத்தலாம். சில ஆவணங்களை சேர்க்கலாம், நீக்கலாம். அதற்கு எந்த தடையும் இல்லை. மனு பரிசீலனையின் போது அனைத்து தகவல்களும் சரியாகவும்,அதற்கான ஆவணங்கள் உண்மையாகவும் இருக்க வேண்டும். மனு பரீசிலனைக்கு முன்பாக எத்தனை முறை வேண்டுமானாலும் திருத்தலாம். தேவையென்றால் அந்த மனுவுக்கு பதிலாக புதிய மனுவையும் கொடுக்கலாம்.

மனு பரிசீலனையின்போது சக வேட்பாளர்கள் சட்ட ரீதியாக எதிர்ப்பு தெரிவிக்காத வண்ணம், தேர்தல் நடத்தும் அலுவலர் ஒப்புக்கொள்ளும் வண்ணம் மனு இருக்க வேண்டும். எனவே சீமான் வேட்பு மனுவில் சிக்கல் ஏதும்வாய்ப்பு இருக்காது என்று கூறப்படுகிறது.

No comments