புரேவிப் புயல்! வவுனியாவும் பாதிக்கப்பட்டது!

வவுனியா மாவட்டத்தில் வவுனியா, வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு மற்றும் வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச செயலாளர் பிரிவுகளில் 74 குடும்பங்களைச் சேர்ந்த 236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு ஐந்து வீடுகள் சேதமடைந்துள்ளது.

இதேநேரம் வவுனியா காவல் நிலையத்திற்கு முன்பாக காணப்பட்ட பழமை வாய்ந்த மரங்களை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதினால் ஏ9 வீதியின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது.

வங்களா விரிகுடாவில் உருவாகிய ´புரவி´ புயல் காரணமாக வவுனியா மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளதுடன் காற்றுடன் கூடிய மழை நீடித்த வண்ணமுள்ளது. இதன் காரணமாக வவுனியா காவல் நிலையத்திற்கு முன்பாகவுள்ள பழமை வாய்ந்த மரங்களை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா காவல்துறையின் ஒத்துழைப்புடன் இலங்கைத் தொலைத் தொடர்பு நிலையத்தின் (எஸ்.எல்.ரி) பாரவூயர்த்தி வாகனத்தின் உதவியுடன் மரங்களை அகற்றும் நடவடிக்கை இடம்பெற்றன.

இவ் நடவடிக்கை காரணமாக ஏ9 வீதியில் வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியிலிருந்து வவுனியா நீதிமன்ற வளாகம் வரையிலான பாதை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

No comments