மயில்வாகனம் பத்மநாதன் அவர்கள் ‘‘நாட்டுப்பற்றாளர்’’ என மதிப்பளிப்பு.

03.12.2020.

மயில்வாகனம் பத்மநாதன் அவர்கள் ‘‘நாட்டுப்பற்றாளர்’’ என மதிப்பளிப்பு.

தமிழர் தாயகத்தில் தேசப்பற்றுமிக்க கல்வியாளனாகவும், விடுதலைப்போராட்டத்திற்காகப் பல தளங்களில் தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்டவரும் தமிழீழ விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்காக உழைத்தவருமான மயில்வாகனம் பத்மநாதன் அவர்கள் 30.11.2020 அன்று சாவடைந்தார் என்னும் செய்தி தமிழ்மக்களைத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவர், கொழும்புத்துறை மற்றும் பலாலி ஆசிரியர் கலாசாலை உடற்கல்வி விரிவுரையாளராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உடற்பயிற்சி விரிவுரையாளராகவும் பணியாற்றியவர். இக்காலத்தில் தனது மக்களுக்காகத் தான் பணியாற்றிய கல்வித்தளத்தினூடாக உடல், உள ஆற்றல்களை இளைய தலைமுறையினரும் ஆசிரியத்துவ மாணவர்களும் உலகப்பரப்புவரை தங்கள் திறனை வெளிப்படுத்த அர்ப்பணிப்புடன் உழைத்த நல்லாசான்.  

தாயக விடுதலையின் தமிழீழ அரசுக்கட்டுமானங்கள் துளிர்விட்ட காலம் தொடக்கம் தன் துறைசார்ந்த பணியை இன்னும் அதிவேகமாக நமது இளந்தலைமுறையினரிடம் இட்டுச்செல்ல வேண்டிய காலத்தின் தேவையை உணர்ந்து தமிழீழத் தேசியத்தலைவரது எண்ணத்தினைப் புரிந்துகொண்டு தனது பல்கலைக்கழக உடற்கல்வி விரிவுரையாளர் ஓய்வுநிலைக்கு முற்றுப்புள்ளி   வைத்து, தமிழீழ விளையாட்டுத்துறையின் இலக்கு நோக்கிய வளர்ச்சிக்கு அத்திவாரமாகச் செயற்பட்டு அதனைக் கட்டியமைப்பதில் பெரும் பங்குவகித்தவர். தமிழீழப்பரப்பிற்குள் அனைத்து மாவட்டங்களின் விளையாட்டுத்துறை விரிவாக்கம், தடகளப் போட்டிகள், குழுவிளையாட்டுக்கள், இவற்றிற்கான பயிற்சிகளென இவரது உழைப்பு அளப்பரியதாகும்.

அத்துடன், கிளிநொச்சிப் பொதுவிளையாட்டரங்கில் நடைபெற்ற மாபெரும் தமிழீழ விளையாட்டுவிழாவைச் சிறப்பாக நடாத்துவதற்கு உழைத்தவர்களில் இவர் பெரும்பங்காற்றியவர். அவ் விளையாட்டு மைதானம் எப்போதும் இளையோரால் நிறைந்திருக்குமளவிற்குத் தனது கடின உழைப்பைத் தமிழீழ விளையாட்டுத்துறைக்காகத் தந்த ஓர் ஆசான். உலகப்பரப்பின் ஐரோப்பியத் தளத்தில் தமிழீழ விளையாட்டுத்துறையின் தமிழீழப் பெண்கள் வலைப்பந்தாட்ட அணியை  துலங்கவைத்தவர். இவரது அர்ப்பணிப்பான பணிக்காகத் தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டவர். 

மாவீரர்களின் கனவினையும் தாயகமக்களின் விடுதலையுணர்வுகளையும் தன்னுள்தாங்கி, அர்ப்பணிப்போடு  தேசியப் பணியாற்றிய இவருடைய இழப்பு, தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் தமிழீழ மக்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பேரிழப்பாகும். இவரது இழப்பால் தவிக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களின் துயரத்தில் நாமும் பங்கெடுத்துக் கொள்வதுடன் மயில்வாகனம் பத்மநாதன் அவர்களின் இனப்பற்றிற்காகவும்  இவர் ஆற்றிய தேசியப் பணிக்காகவும்  ‘‘நாட்டுப்பற்றாளர்’’ என மதிப்பளிக்கின்றோம்.

‘‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’’

அனைத்துலகத் தொடர்பகம்.
தமிழீழ விடுதலைப் புலிகள்.

No comments