கூட்டமைப்பினரே: வரப்பிரசாதங்களிற்காக பலிகொடுக்காதீர்கள்?


பொறுப்புக்கூறலில் இருந்து விலகுவதாக இலங்கையின் புதிய அரசின் வெளிவிவகார அமைச்சர் ஜநாவில் தெரிவித்துவிட்டார்.இதன் பின்னரும்

ஜெனீவாவில் இலங்கை அரசிற்கு கால அவகாசம் வழங்க பாடுபடுவது வேடிக்கையானது.

தமக்கான வரப்பிரசாதங்களை பெறுவதற்காக எம்மை பலிகடா ஆக்காதீர்கள் என சுமந்திரன் தரப்புக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் பகிரங்க கோரிக்கையை விடுத்துள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தில் எமக்கு செய்த துரோகத்தை போல் இனியும் கால அவகாசம் வழங்கி அரசாங்கத்தை காப்பாற்ற நினைக்க வேண்டாம் எனவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பத்தினர் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வமைப்பின் பிரதிநிதிகள் கூட்டாகத்  தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஜெனிவாவில் எதிர் வரும் மார்ச் மாதத்தில் இடம்பெறும் அமர்வில் இலங்கை அரசாங்கத்திற்கு   மீண்டும் கால அவகாசம் கோரும் பிரேரணை ஒன்றை சமர்ப்பிப்பதற்காக எமக்காக போராடும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளதாக அறிகிறோம்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக நீதியை பெற்றுக்கொடுக்க பல வழிகள் கிடைத்த போதும் அதனை தவறவிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் பல சலுகைகளை பெற்றிருந்தார்கள்.


2017 ஆம் ஆண்டு ஐநா அமர்வு இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுத் தருமாறு ஜெனிவா சென்று மஜகரை  கையளித்தோம்.


இறுதி யுத்தத்தை முன்னின்று நடத்திய சர்வதேசம் நமது பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு காலம் கடத்தாமல்  நீதி பெற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்தோம்

இலங்கை அரசாங்கத்தை ஐநா மனித உரிமை பேரவையில் இருந்து பாதுகாப்புச் சபை ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதன் மூலம் எமக்கான நீதி கிடைக்கும் என்பதே எமது எதிர்பார்ப்பு.



இன் நிலையில் தற்போதைய அரசாங்கத்தை சர்வதேசம் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்ற நிலையில் எமக்கு சாதகமான ஒரு தீர்மானம் எதிர்வரும் மார்ச் மாத அமர்வில் வரக்கூடும் என்ற நம்பிக்கையும் எமக்கு இருக்கிறது.


இறுதிக்கட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளைத் தேடி ஆயிரம் நாட்களை கடந்து வரும் நிலையில் இதுவரை 79 தாய்மார்கள் தமது உயிர்களை விட்டுள்ளனர்.


ஐநாவில் கால அவகாசத்தை வழங்க முற்படுவோர்  தெருத் தெருவாக உறவுகளுக்காக  போராடும் எம்மோடு கலந்துரையாடாவிட்டாலும் எமக்காக போராடுபவர்களுடன்  கலந்துரையாடி முடிவுகளை எடுக்க வேண்டும்.



எமது போராட்டத்துக்கு ஆதரவு அளித்து வரும் பாராளுமன்ற உறுப்பினர்களான கயேந்திரகுமார்; பொன்னம்பலம் மற்றும் சி.வி விக்னேஸ்வரன் போன்றோர் சுமந்திரன் அனுப்பிய இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றும் பிரேரணையை நிராகரித்து விட்டார்கள். 


ஒரே நிலைப்பாட்டில் உள்ள தமிழ் கட்சிகள்  எமக்காக குரல் கொடுத்து வரும் நிலையில் அவர்களோடு சேர்ந்து பயணிக்காமல் சிலர் தாமாக தனிப்போக்கில் முடிவுகளை எடுப்பது ஆரோக்கியமானதாக அமையாது.


ஆகவே  காணாமல் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக நீதி வேண்டி போராடும் எம்மை பணயம் வைத்து அரசாங்கத்திடம் வரப்பிரசாதங்களையும் சுகபோக வாழ்க்கையைபெறாது எம்மை தயவு செய்து விட்டுவிடுங்கள் என அவ் அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.


No comments