காட்சி மாறியது: மணிக்கு சுமந்திரன் ஆதரவு?


யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் தெரிவில் சுமந்திரனின் ஆதரவுடன் சட்டத்தரணி வி. மணிவண்ணன் போட்டியிடவுள்ளார். முன்னதாக சொலமன் சிறிலை களமிறக்க சுமந்திரன் சிபார்சு செய்த போதும் அதனை மாவை அணி ஏற்றுக்கொள்ளவில்லை.

இதனையடுத்து மணிவண்ணனிற்கு ஆதரவளிக்க சுமந்திரன் சிபார்சு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

“பாதீடு தோற்கடிக்கப்பட்டு பதவியிழந்த முதல்வர் ஆனல்ட்டை மீண்டும் களமிறக்குவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அவர் மீளவும் முதல்வராகத் தெரிவானால் பாதீடு தோற்கடிக்கப்பட்டு ஆட்சி கலைக்கப்படும் நிலை ஏற்படும்.

எனவே தற்போதனைய ஆட்சிக்காலத்தைத் தக்கவைத்து அனைவருடனும் இணைந்து உறுதியான ஆட்சியை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம்.

எனவே கட்சி பேதமின்றி சபையின் அனைத்து உறுப்பினர்களும் உறுதியான ஆட்சிக்கு வாக்களிக்கவேண்டும்” என்று யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் கேட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் தெரிவுக்காக நாளை முற்பகல் 9.30 மணிக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் கூடுகிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதல்வர் பதவிக்கு இம்மானுவேல் ஆனல்ட் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் பொதுவான போட்டியாளராக உறுப்பினர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் போட்டியிடுகிறார்.

யாழ்ப்பாணம் மாநகர கல்வியலாளர்கள், மதத் தலைவர்கள் உள்ளிட்டோரிடம் கருத்துக்கள் பெறப்பட்ட பின்னரே இந்த முடிவுக்கு சட்டத்தரணி வி.மணிவண்ணன் சம்மதித்தார் என்று அவரது தரப்புகள் தெரிவித்தன.

No comments