கைது செய்யப்படுவர்கள் எங்கே?

இந்த மாதம் (மார்கழி) 3 ஆம் திகதி இயக்கச்சிப் பகுதியில் நால்வர் வெடிபொருட்களுடன் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இயக்கச்சி பனிக்கையடிப் பகுதியில் வீடொன்றினுள் மறைத்து வைக்கப் பட்டிருந்த வெடி பொருட்களே இவ்வாறு இராணுவத்தினரால் கைப்பற்றப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டிருந்தது.

இதனோடு தொடர்புடையவர்கள் என்று  அப்பகுதியைச் சேர்ந்த தயானுஜன் அம்பிகா (35 வயது), சிங்கராஜா தயானுஜன் (29 வயது), செல்வநாயகம் ராசமலர் (வயது 67), குலசிங்கம் புவனேஸ்வரி (வயது 62) ஆகியோரே கைது செய்யப்பட்டிருந்தனர்.

ஆனால் இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களது தற்போதைய நிலை, எங்கு தடுத்து வைக்கப் பட்டுள்ளார்கள் போன்ற  எதுவிதமான தகவல்களையும் பெற முடியாது  கைது செய்யப்பட்டவர்களது உறவினர்கள் தவித்து வருகின்றனர்.

இதில் 67 வயதினையுடைய செல்வநாயகம் ராசமலர் என்பவர்; விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயன்றார்கள் என்று நெடுங்கேணிப் பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட கோபி என்பரவது தாயாராவார்.  இவர் ஏலவே இரண்டு மாவீரர்களின் தாயார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

No comments