புலிகளும், ரணிலும், மகிந்தவும், நானும், கருணாவும், மௌலானாவும்?


மனோ கணேசன் அவ்வப்போது தனக்கு ஓரளவு தெரிந்தவற்றை அவிழ்த்துவிடுவது வழமை.தற்போது அவரது புதிய வெளியீட்டில் 
"விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை சந்தித்து விட்டு நான் கொழும்பு வந்த அடுத்தநாள் பிரதமர் ரணிலை, அவரது பாராளுமன்ற அலுவலகத்தில் சந்தித்தேன்.
நான் விடுதலை புலிகள் தலைவரை சந்திப்பதற்கு கிளிநொச்சி சென்ற பொழுது, பிரதமர் ரணில் கொழும்பில் இருக்கவில்லை. ஆகவே அப்போது அரசாங்கத்தில் "செகண்ட்-இன்- கமாண்ட்" ஆக இருந்த அமைச்சர் கரு ஜெயசூர்யவிடம் எனது பயணத்தை பற்றி கூறி சென்றிருந்தேன்.
ஜனாதிபதி சந்திரிகா ஒரு தகவலை கொண்டு சென்று புலிகளின் தலைவரிடம் சேர்க்க சொன்னார் என்று கருவிடம் முன்னமேயே கூறி இருதேன்.
கரு மூலமாக எனது கிளிநொச்சி பயணத்தை அறிந்த ரணில், புலிகளின் தலைவர் பிரபாகரனுடனான எனது சந்திப்பு பற்றி அறிய விரும்பினார்.
அதே சமயத்தில் கிளிநொச்சி சென்று, புலிகளின் தலைவரை என்னைப் போலவே சந்தித்த அமைச்சர்கள் ஆறுமுகம் தொண்டமான், பெரியசாமி சந்திரசேகரன் ஆகியோரிடமும் ரணில் கதை விட்டு தகவல்கள் பிடுங்கி இருக்கலாம்.
எனது சந்திப்பு பற்றி, என்னுடன் ரணிலுக்கு பேசி அறிய வேண்டிய தேவை இருந்ததை போல, எனக்கும் ரணிலுடன் இது பற்றி பேச வேண்டிய தேவை இருந்தது. புலிகளின் தலைவர், "ரணிலுக்கு சொல்லுங்கள்!" என்று எனக்கு சொன்ன செய்தியை நான் பிரதமர் ரணிலிடம் கூற வேண்டும் அல்லவா?
விடுதலை புலிகள் தலைவரால் சொல்லப்பட்ட, கருணா அம்மான் தொடர்பான விடயத்தை அவர் சொன்ன மாதிரியே நான் ரணிலிடம் சொன்னேன். "அலிசாஹீர் மௌலானா மூலமாக கருணா அம்மானை கொழும்புக்கு கூட்டி வந்தீர்கள். இன்று அவரை கொழும்பிலே இரகசியமாக ஒளித்து வைத்திருக்கிறீர்கள்." என்று பிரபா கூறியதை அப்படியே ரணிலிடம் கூறினேன்.
நான் இதை சொன்ன பொழுது ரணிலின் அறையில் நானும், ரணிலும் மட்டும்தான் இருந்தோம். மேசையின் அந்த பக்கம் ரணில். இந்த பக்கம் நான். ரணில், என் முகத்தை சற்று நேரம் உற்று பார்த்துக்கொண்டு இருந்தார்.
பிறகு, பிரபாவின் குற்றச்சாட்டை முற்றாக மறுத்தார். கருணா அம்மான் தானாகவே பிரபாவுடன் முரண்பட்டு, சண்டையிட்டுக்கொண்டதாகவும்தான் தனக்கு புலனாய்வு அறிக்கை கிடைத்ததாக ரணில் என்னிடம் சொன்னார்.
இப்பொழுது எனது சந்தர்ப்பம். நான் சற்று நேரம் ரணில் முகத்தை உற்று பார்த்துக்கொண்டு இருந்தேன். இல்லை, இல்லை என்று மறுத்து நாட்டின் பிரதமருடன் விவாதம் செய்ய வேண்டிய தேவை எனக்கு இருக்கவில்லை.
"இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது, மிஸ்டர் பிரபாகரன் அப்படித்தான் உங்களுக்கு சொல்ல சொன்னார்." என்று கூறிவிட்டு அந்த அறையில் இருந்து வெளியேற தொடங்கினேன்.
அமைதியாக அமர்ந்திருந்த பிரதமர் ரணில், கதவு பிடியில் கைவைத்து கதவை திறக்க முற்பட்ட என்னை அழைத்து, அவரது ஆசனத்தில் அமர்ந்திருந்தபடியே "உண்மையிலேயே பிரபாகரன் அவ்வாறு கூறினாரா?" என்று கேட்டார்.
நான் கதவுக்கு அருகில் நின்றபடியே "ஆம்!" என்று வார்த்தையாலும், தலை அசைத்தும் கூறிவிட்டு பிரதமர் அறையில் இருந்து வெளியேறினேன்.
அடுத்து வந்த நாட்களில் சில சம்பவங்கள் நடந்தன. ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் எம்பீயாக இருந்த அலிசாஹீர் மௌலானா தனது எம்பீ பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னர் அவர் நாட்டிலிருந்து வெளியேறினார்.
இந்த முடிவுகளுக்கு பின்னால் பிரதமர் ரணில் இருந்ததை நான் ஊகித்துக்கொண்டேன்.
அப்போது அலிசாஹீர், ஐக்கிய தேசிய கட்சியின் நேரடி உறுப்பினர். அவரது தலைவர் ரணில் விக்ரமசிங்கதான். இப்போது அலிசாஹீர், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினர். இப்பொழுது அவரது தலைவர் நண்பர் ரவுப் ஹக்கீம்.
அலிசாஹீர் நல்லாட்சியின் இறுதி வருடத்திலேயே எனது அமைச்சின் பிரதி அமைச்சராகவும் சில மாதங்கள் இருந்தார்.
எனினும் நான் ஒருபோதும் நேரடியாக அலிசாஹீரிடம் "நீங்களா, கருணா அம்மானை புலிகள் அமைப்பில் இருந்து பிரித்து கொழும்புக்கு அழைத்து வந்தீர்கள்?" என்று கேட்கவே இல்லை.
புலிகள் அமைப்பில் இருந்து கருணாவை நீங்களா பிரித்தீர்கள் என்று அலிசாஹீரிடமோ, ரணிலிடமோ நான் கேட்டிருந்தால் அதைவிட முட்டாள்தனமான ஒரு கேள்வி இருந்திருக்காது.
விடுதலை புலிகள் அரசியல் சிறுவர்கள் கிடையாது. அவர்களை யாரும் திட்டமிட்டு பிரிக்க முடியாது. அவர்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளைத்தான் அடுத்தவர்கள் பயன்படுத்த முடியும்.
ஆகவே புலிகளின் தலைவர் தனது கிழக்கு மாகாண தளபதியை தனது அமைப்பில் இருந்து வெளியேற்றினார். இதையே கருணா அம்மானிடம் கேட்டால், என்னை யாரும் வெளியேற்றவில்லை, நானே தான் வெளியேறினேன் என்று கூறுவார். அது அவரவர் நிலைபாடுகள்.
எது எப்படி இருந்தாலும் கூட, விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து விலகிவிட்ட கருணா அம்மானை அலிசாஹீர் கொழும்புக்கு அழைத்து வந்தார் என்று எனக்கு நம்பத்தகுந்த தகவல் கிடைத்திருந்தது.
கருணாவும், அலிசாஹீரும் ஒரே மட்டக்களப்பு மாவட்டத்துகாரர்கள் என்ற முறையிலும், இந்த சம்பவங்கள் நிகழ்ந்திருக்கலாம்.
இலங்கை நாட்டின் பிரதமர் என்ற முறையிலே ரணில் விக்கிரமசிங்க, கருணா அம்மான் விடுதலை புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிவதை விரும்பியிருப்பார். பிரிந்த கருணாவை தனது எம்பீ மௌலானா ஊடாக கொழும்பிற்கு கொண்டு வந்திருப்பார்.
இது பின்நாட்களில் கருணா அம்மானை பயன்படுத்தி எல்டிடீயை தோற்கடிக்க ராஜபக்ச அரசாங்கத்திற்கு வழி சமைத்தது.
இதிலே தூரதிஷ்டசாலிகள் இரண்டு பேர். ஒருவர் பிரதமர் ரணில். அடுத்தவர் புலிகளின் தலைவர் பிரபா.
தான் புலிகளின் பிரதான தளபதியை பிரித்து, புலிகளை பலவீனப்படுத்தி, அவர்கள் தோல்வியடைவதற்கு பெரும் காரணகர்த்தா என்று தன்னை சிங்கள மக்கள் மத்தியிலே சந்தைப்படுத்திக்கொள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முடியவில்லை. இது ரணிலின் தூரதிஷ்ட்டம்.
அதே போல ரணிலை தோற்கடித்து, அதன் மூலம் கொழும்பிலே ஒரு சிங்கள தேசீயவாத அரசாங்கம் உருவாகினால்தான், தமிழ் ஈழத்திற்கான தமது பயணம் இலகுவாகும் என புலிகளின் தலைவர் பிரபாகரன் தவறாக கணக்கு போட்டு விட்டார். 
இங்கே அதிஷ்டசாலி யார்? சந்தேகம் இல்லாமல் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தான்...!
பிரபா கட்டளையிட்டு ரணிலுக்கான வாக்குகளை வடக்கில் தடுக்க, சுலபமாக ஆட்சிபீடம் ஏறி, ரணில் பிரித்து கொழும்பிற்கு கொண்டு வந்த கருணாவை பயன்படுத்தி யுத்தத்தையும் வென்றவர் மஹிந்த...!
.

No comments