ஊழ்வினை:ரணிலின் தனி விஞ்ஞாபனம்?


ஐக்கிய தேசியக் கட்சி இன்று தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டது. பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்பவதில் கவனம் செலுத்தும் விதமான இந்த விஞ்ஞாபனம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால், கட்சி தலைமையமான சிறிகோத்தாவில் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது. டிஜிட்டல் முறையிலான விஞ்ஞாபனமே வெளியிடப்பட்டது.

கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதில் தமது விஞ்ஞாபனம் கவனம் செலுத்துகிறது என ரணில் தெரிவித்தார்.

அத்துடன், சர்வதேச நாடுகளுடனான உறவை மீள வலுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

“எந்த நாடும் ஐக்கிய நாடுகளை விட்டு வெளியேறவில்லை. எதிர்காலத்தில் இந்தக் கொள்கையையே தொடருவோம். யு.என்.பி தலைமையிலான 2001-2004 மற்றும் 2015-2019 அரசாங்கங்களின் போது நாங்கள் அனைத்து நாடுகளுடனும் நட்பு, உயர் மட்ட இராஜதந்திர உறவுகளைப் பேணி வருகிறோம். எங்கள் நெருங்கிய நட்பு நாடுகளில் இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, வியட்நாம், அமெரிக்கா, கனடா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா, மத்திய கிழக்கு, சார்க், பிம்ஸ்டெக் மற்றும் ஆசியான் நாடுகள் மற்றும் கென்யா மற்றும் தென்னாபிரிக்கா ஆகியவை அடங்கும்.” என விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.தே.க அரசாங்கத்தின் கீழ், மின்சாரம் மற்றும் நீர் நுகர்வோர் மற்றும் வணிக சமூகத்திற்கு சலுகைகள் வழங்கப்படும், அதே நேரத்தில் வேலையின்மை தீர்க்கப்படும் என்று விக்ரமசிங்க கூறினார்.

பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக இலங்கை வெளிநாட்டு நிதி உதவியை நாடும் என்றும் அவர் கூறினார்.

முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் குத்தகை நிறுவனங்களிடமிருந்து பாதுகாக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை பலவீனப்படுத்தாமல் ஜனநாயகத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

No comments