புலிகள் உருவாக்கிய கூட்டமைப்பில் புலிகளை இணைக்கிறதாம் ரெலோ?


விடுதலைப் போராட்டத்தில் தம்மை அர்ப்பணித்த போராளிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஒரு அங்கமாக ஜனநாயக நீரோட்டத்தில் கலந்து கொள்ளுகின்ற ஒரு முறைமையை மேற்கொள்ளுவதற்காக தமிழீழ விடுதலை இயக்கம் முதற்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.


எங்களுடைய இனத்தின் சார்பாக உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேறு திசையில் செல்லாமல் இருப்பதற்கும் ஆயுதம் ஏந்திய போராளிகள் ஜனநாயக நீரோட்டத்திற்கு வர வேண்டும் என்பது தான் பிரதான நோக்கமாக இருக்கிறது.

அந்த வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பை இந்தப் போராளிக் கட்சிகள் பலம் சேர்க்க வேண்டும்.அதன் ஒரு அங்கமாகவும் பங்கு தாரர்களாகவும் வர வேண்டும் என்பது எங்களுடைய நோக்கம்.

அந்த வகையில் விடுதலைப் புலிகளின் போராளிகள் 3 அல்லது 4 அமைப்புகளாக இருக்கிறார்கள்.

தேசியத்தோடு இன உணர்வோடு இருக்கின்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்புக்களை தனித்துவத்தோடு தமிழ் தேசிய கூட்டமைப்பில் போராட்ட இயக்கங்கள் என்கின்ற அடிப்படையில் நாங்கள் ஒற்றுமையான ஒரு நிர்வாக கட்டமைப்புடன் கொண்ட அமைப்பாக செயல்பட வேண்டும் என்ற அடிப்படையில் நாங்கள் அந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறோம்.

அடுத்த வாரம் நாங்கள் எல்லாரும் சேர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்குதாரர்களாக விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்ட இயக்கங்களை நாங்கள் இணைக்கின்ற ஒரு முயற்சியை மேற்கொள்ளுகின்றோம்.

அந்த வகையில் தேசியத்தோடு நிற்கின்றவர்கள் குறிப்பாக ஈரோஸ், விடுதலைப் புலிகள் என அமைப்புகள் தற்போது உள்ளனர்.

அவர்களை இணைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பில் இனிவரும் காலங்களில் அரசியல் நீரோட்டத்தில் அவர்கள் இணைத்து எங்களுடைய மக்களுடன் பயணிக்க உள்ளோம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் பங்குதாரராக இருப்பதற்கு அவர்களுக்கு உரித்து இருக்கின்றது. அதற்கான வழியை ஏற்படுத்துவதற்கு தமிழீழ விடுதலை இயக்கம் முயற்சி செய்து கொண்டிருக்கிறதெனவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

No comments