கொரோனா அன்பழகனை காவு கொண்டது?

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பகுதியின் சட்டமன்ற உறுப்பினரான ஜெ.அன்பழகன்(62) கொரோனா தொற்றால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 8 நாள்களாக கொரோனா தொற்று காரணமாக தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் அவர் இன்று (10) காலை 8 மணியளவில் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
தீவிர மூச்சுத் திணறல் மற்றும் கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவருக்கு 80 சதவீத பிராண வாயு, செயற்கை சுவாச (வென்டிலேட்டா்) கருவியின் உதவியுடன் வழங்கப்பட்டு வந்தது. 
இதனிடையே, அதற்கு அடுத்த இரு நாள்களில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று மீண்டும் ஜெ. அன்பழகன் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நர்வாகம் தெரிவித்தது.
சிறுநீரகம், இதயத்தின் செயல்பாடுகள் மோசமாக இருப்பதாகவும், அன்பழகனுக்கு தேவைப்படும் ஒக்சிஜன் அளவு அதிகரித்துள்ளது. 
ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதற்கு மருந்துகள் அளிக்கப்பட்டதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ரேலா மருத்துவமனைக்கு விரைந்து சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் ஜெ.அன்பழகனின் உடல்நிலை குறித்து ஆலோசனை நடத்தினார். 
இந்த நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மூச்சு திணறலால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். 
ஜெ.அன்பழகன் காலமானார் செய்தி அறிந்து குரோம்பேட்டை ரேலா மருத்துவமனை முன் சென்னை மேற்கு மாவட்ட திமுகவினர் விரைந்துள்ளனர். 
காலமான ஜெ. அன்பழகன் திமுக சார்பில் மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர். 
2001-இல் தியாகராயர் நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அவர், 2011 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராக பொறுப்பு வகித்தவர். 
இவருக்கு ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர். ஜெ. அன்பழகன் மகன் ராஜா கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லை. 

No comments