இந்தியா இல்லாவிடின் புலிகளை வென்றிருக்கமுடியாது:மகிந்த


இந்தியாவின் உதவியில்லாமல் 2009 ஆண்டு யுத்தத்தை நிறைவு செய்திருக்க முடியாதென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்துஸ்தான் ரைம்ஸ் செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
குறித்த செவ்வியில் அவர் தெரிவித்துள்ளதாவது;
“இந்தியாவும் பாகிஸ்தானும் இலங்கையின் 30 ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு உதவி உள்ளன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் எங்களுக்கு ஆயுதங்களையும் விமானங்களையும் பாகிஸ்தான் அளித்தது. இந்தியாவும் கூட இலங்கைக்கு உதவி செய்தது. ஆனால் அதை நாங்கள் பகிரங்கப்படுத்தவில்லை. இந்தியாவின் உதவி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தில் நாங்கள் வெற்றி பெற்றிருப்போம் என நினைக்கவில்லை.
இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக இந்தியா முன்னரே எச்சரிக்கை விடுத்தது. ஆனால் அப்போது இலங்கையில் இருந்த அரசாங்கம் இதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது. இது தொடர்பாக விசாரணைகளை நடத்தி வருகிறோம்.
எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் இந்தியாவின் உள்விவகாரங்களில் ஒருபோதும் தலையிடமாட்டோம். எங்களுடன் நட்பாக இருக்கும் நாடுகளுக்கு ஒவ்வொரு பார்வை இருக்கலாம். ஆனால் இந்திய விவகாரங்களில் தலையிடுவதில்லை என்பது எங்கள் நிலைப்பாடு. ஏனெனில் இந்தியா எங்களது உறவு நாடு. மற்றவை நட்பு நாடுகள். இதைநான் பல முறை குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறேன். யுத்தத்தால் இலங்கை மிக மோசமாக பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டது. ஆகையால் நாட்டை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்ப வேண்டிய அவசியம் எங்களுக்கு இருக்கிறது.
இதற்கு சீனா உதவ முன்வரும் போது அதை நாங்கள் தவிர்க்க முடியாது. இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் நாங்கள் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள முயற்சிக்கிறோம். இதற்காகவே நிதியையும் ஒதுக்கியிருக்கிறோம்.
ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற தமிழர் அரசியல் கட்சிகள் வளர்ச்சியை விரும்பவில்லை. அதிகாரப் பகிர்வு, இனப் பிரச்சினைக்கு தீர்வு என்றே அவர்கள் பேசி வருகின்றனர்” இவ்வாறு மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

No comments