பிணையில் விடுவிக்கப்பட்டார் சுவிஸ் தூதரக பணியாளர்!

இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு, துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதன் பின்னர், விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக உள்ளூர் பணியாளரான கானியா வெனிஸ்டர் பிரான்ஸிஸ், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று (30) ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் உள்நாட்டில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர்,  கடந்த மாதம் 25 ஆம் திகதி தனது அலுவலக பணிகளை நிறைவு செய்து வீடு திரும்பும் போது கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது.
அதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்தது.

விசாரணைகளை அடுத்து, கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரக பணியாளர் கானியா வெனிஸ்டர் பிரான்சிஸை இன்று (30) வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதம நீதவான், கடந்த 17ஆம் திகதி உத்தரவிட்டார்.
குறித்த தூதரக அதிகாரியை கைது செய்யுமாறு சட்ட மாஅதிபர் வழங்கிய ஆலோசனைக்கு அமைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இவர், கடந்த 16ஆம் திகதி பிற்பகல் கைது செய்யப்பட்டார். 
பொய் சாட்சியம் வழங்கியமை தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு சட்ட மாஅதிபர் அறிவுறுத்தியதாக சட்ட மாஅதிபரின் இணைப்பதிகாரி அரச சிரேஷ்ட சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன குறிப்பிட்டிருந்தார்.
சுவிஸர்லாந்து தூதரக பெண் அதிகாரி, ஆறாவது நாளாக கடந்த 16ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
அத்துடன், அன்று காலை 9 மணியளவில் அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகிய அவர், மருத்துவப் பரிசோதனைகளுக்காக அவர் அங்கொடை தேசிய மனநல மருத்துவ சேவை பிரிவுக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையிலே பொய்ச் சாட்சியமளித்து அரசாங்கத்தை அசௌகரியத்திற்குள்ளாக்கியது தொடர்பில் அவரை கைது செய்யுமாறு சட்ட மாஅதிபர் ஆலோசனை வழங்கியிருந்தார்.
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, கானியா வெனிஸ்டர் பிரான்சிஸ் கடந்த 08ஆம் திகதி முதன்முறையாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார். அதனை தொடர்ந்து அவர் பல தடவைகள் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், விளக்கமறியல் உத்தரவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவருக்கு இன்று (30) பிணை வழங்கப்பட்டுள்ளது.

No comments