தேங்காய் பாதியால் 140 தேங்காய்கள் திருடப்பட்டது - சுவாரஸ்ய சம்பவம்
பராமரிக்கப்பட்ட தென்னை மரங்களிலிருந்த சுமார் 140 தேங்காய்கள் நள்ளிரவில் மாயமானதாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறைப்பாட்டை மட்டக்களப்பு ஐயங்கேணியைச் சேர்ந்த 60 வயதான பெண் ஒருவர் செய்துள்ளார்.
முறைப்பாட்டில் மேலும், ஏறாவூர் 3ஆம் குறிச்சியிலுள்ள எனது சகோதரனின் வீட்டையும் வீட்டு வளவிலுள்ள பயன்தரும் மரங்களையும் நானே பராமரித்து வருகின்றேன். அங்குள்ள 7 தென்னை மரங்கள் அதிகளவான தேங்காய்களுடன் காணப்பட்டன.
சனிக்கிழமை நான் வழமைபோன்று தென்னை மரங்களைப் பராமரிப்பதில் ஈடுபட்டிருந்தபோது தென்னை மரங்களிலிருந்த 140 தேங்காய்கள் காணாமல் போயிருந்தது.
தேங்காய் நன்றாக முற்றிப் பழுக்கட்டும் என்பதற்காக நான் அவற்றைப் பிடுங்காமல் மரத்திலேயே விட்டு வைத்திருந்தேன்.
அதேவேளை, சனிக்கிழமை நான் அயல் வீட்டில் பாதி தேங்காய் கடன் வாங்கி கறி சமைத்திருந்தேன். அவ்வாறிருக்கும்போது எனது பராமரிப்பிலிருந்த தேங்காய்கள் திருடப்பட்டுள்ளன. எனவே, சந்தேக நபரிடமிருந்து தகுந்த நஷ்டஈடு பெற்றுத் தருவதோடு சந்தேக நபரைப் பொலிஸார் எச்சரிக்கவும் வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் பற்றி ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
Post a Comment