ஒருநாள் செல்ஃபி வசூல் ரூ.1,19,050,சம்பளத்தையும் கட்சிக்கென எழுதி கொடுத்துவிட்டார் வைகோ!

தனது நாடாளுமன்ற உறுப்பினருக்கான சம்பளம் முழுவதும் கட்சிக்குத்தான் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோஎழுதிகொடுத்து விட்டதாக கூறுகின்றார்.

வடசென்னை மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது இந்த  நிகழ்ச்சியில் வடசென்னை மதிமுக சார்பில் கட்சியின் மாநில மாநாட்டு நிதியாக ரூ.55,000 வழங்கப்பட்டது.

பின்னர் அங்கு  உரையாற்றிய வைகோ, “இடைவிடாத உழைப்பு மற்றும் ஓய்வில்லாத அலைச்சலால் நான் சற்று பாதிக்கப்பட்டிருக்கிறேன். இன்று ஒருநாள் ஓய்வு எடுக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், மாநாட்டு வேலைகள் நிறைய இருப்பதால் இன்று உங்கள் மாவட்டத்திலேயே செயல்வீரர்கள் கூட்டத்தை ஆரம்பித்துவிட்டேன். ஏனெனில் இந்த வடசென்னையில் உள்ள ராபின்சன் பூங்காவில்தான் திமுக தொடங்கப்பட்டது. அண்ணா பிறந்தநாள் விழாவை முழுநாள் நிகழ்வாகக் கொண்டாட உள்ளோம். பண நெருக்கடியின் காரணமாக மாலை நிகழ்ச்சி மட்டும் போதும் என்று கூறினர். நான் நாடாளுமன்றம் சென்ற பிறகு கழகத்தினர் புத்துணர்வுடன் இருக்கிறார்கள். நாடு நம்மிடம் நிறையவே எதிர்பார்க்கிறது. எனவே இந்த மாநாட்டைக் காலையிலேயே தொடங்கிவிடுவோம் என்று முடிவு செய்தோம்” என்று தெரிவித்தார்.
மாநாட்டு நிகழ்ச்சிகள் குறித்தும் கலந்து கொள்வோர் குறித்தும் தொண்டர்களிடம் எடுத்துரைத்த வைகோ, “நமது கட்சி என்ன மிட்டா மிராசுகளின், கோடீஸ்வரர்களின் கட்சியா? என்னுடைய மாதச் சம்பளத்தைக் கழக அலுவலகத்துக்குப் பொதுச் செயலாளர், மதிமுக என்ற முகவரியில் அனுப்பும்படி நாடாளுமன்றத்தில் எழுதிக் கொடுத்து விட்டேன். எனக்கு வரும் படியை மட்டும் வைத்து செலவு செய்ய முடிவு செய்திருக்கிறேன்” என்றும் கூறினார்.
மேலும், “நல்லவேளை என்னுடைய வருகைக்காக நீங்கள் வெடி ஏதும் வெடிக்கவில்லை. வெடியால் பொதுமக்களுக்கு ஆபத்து, சுற்றுச்சூழலுக்கு ஆபத்து. இங்கு ஏதாவது குடிசையில் பற்றி தீப்பிடித்தது என்றால் அந்த பழியும் நம்மீது தான் வரும். இனி நான் பங்கேற்கும் எந்த நிகழ்ச்சியிலும் பட்டாசுகள் கொளுத்தக் கூடாது. அதை மீறிச் செயல்படுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் கண்டிப்புடன் தெரிவித்தார்.

ஏற்கனவே திமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி , “கழகப் பொதுச்செயலாளருக்கு, கழகத் தோழர்கள் இனி யாரும் சால்வை அணிவித்தல் கூடாது. சால்வை அணிவிக்க விரும்புவோர் அதற்குப் பதிலாகக் கழகத்துக்கு நிதி வழங்கலாம். கழகப் பொதுச் செயலாளருடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள விரும்புவோர் குறைந்தபட்சம் நிதியாக ரூபாய் 100 வழங்க வேண்டும்” என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் சால்வைக்குப் பதிலாக வைகோவிடம் தொண்டர்கள் பணம் கொடுத்து செல்ஃபி எடுத்துக்கொண்டனர். அதன்மூலம் ரூ.1,19,050 நிதியாகக் கிடைத்துள்ளது என மதிமுகவினர் குறிப்பிடுகின்றனர்.

No comments