காஷ்மீர் விவகாரத்தில் கண்டிப்பும் வேண்டும், அனுசரணையும் வேண்டும்

காஷ்மீரின்_நிகழ்வுகள்… பிரிவுகள்370, 35A நீக்கம் என
நாடாளுமன்ற மாநிலங்களவையில்இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.
குடியரசுத் தலைவரும் இதற்கான ஒப்புதலை அளித்துவிட்டார்.

இதன் மூலம் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் என்ற அந்தஸ்தை இழந்தது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை
ஜம்மு-காஷ்மீர், லடாக் என்று இராண்டாக பிரிப்பதாக அறிவித்துள்ளது.

இதன் மூலம் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் இருக்கும். அதேபோல் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக் செயல்படும்.

இதன்படி ஜம்மு காஷ்மீருக்கு
தனி கொடி, தனி அரசியல் சாசனம் என்று எந்த விதமான அதிகாரங்களும் இருக்காது.

இந்தியாவில் பிறப்பிக்கப்படும் சட்டங்கள் அனைத்தும் காஷ்மீருக்கு பொருந்தும்.

 மாநிலத்தின் எல்லைகளை விரிவுபடுத்தவோ, குறைக்கவோ முடியாது என்கிறது அரசியசல் சாசனத்தின் 370-வது விதி.

ஆனால் இனி மத்திய அரசு நினைத்தபடி எல்லைகளை மாற்றலாம்.
இந்திய அரசியல் சாசனத்தின் 238 வது பிரிவு இம்மாநிலத்திற்கு பொருந்தாது என்று நிலை தற்போது நீக்கப்பட்டுள்ளது.

இனி அனைத்து துறை சார்ந்த மீது மத்திய அரசு நிறைவேற்றும் மசோதாக்களை
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையின் சம்மதம் இல்லாமல்
அங்கு அமலுக்கு கொண்டு வர முடியும்.

இனி வெளிமாநில ஆண்களை
காஷ்மீரில் வாழும் பெண்கள் மணமுடித்தால் அந்த ஆண்களால் இங்கு சொத்துகளை வாங்க முடியும்.
முன்பு இந்த அதிகாரம் கிடையாது.

இரண்டு நாளாக இருந்த இறுக்கம் இதுதான் மத்திய அரசின் முடிவென்று தெரிய வந்துள்ளது. இனிமேலும் இந்த பிரச்சனை எப்படி அணுகப்படும் என்பதும் கேள்விக்குறியானது.

காஷ்மீர் பிரச்சனை இன்றல்ல.
பிரிட்டிஷ் காலத்திற்கு முன்பே சிறு சிறு கலகங்களாக தொடங்கின.

ஆங்கிலேயர் சாமர்த்தியமாக இதில் காய்களை நகர்த்தி தங்களடைய இருப்பையும், ஆதாயத்தையும் பெருக்கிக் கொண்டனர்.

பஞ்சாப்பை பிடித்து ஆப்கானை ஆக்கிரமித்ததைப் போல காஷ்மீர் பிரச்சனையிலும் சிக்கல் உருவாகின.

 ஆங்கிலேயர்களுக்கு பல வகையில் துணையாக நின்ற ரன்பீர்சிங்கை
காஷ்மீர் அரசராக அங்கீகரித்தனர்.
அவருடைய வாரிசான ஹரிசிங்தான்
அதாவது முன்னாள் மத்திய அமைச்சர்
கரண் சிங்கின் தந்தையார் காலத்தில்தான்
பல நிகழ்வுகள் நடந்தேறின.

இப்படியான சிறுசிறு பிரச்சனைகள் இருந்தபொழுது
நாடு 1947இல் விடுதலை பெற்றபோது,
இந்தியா – பாகிஸ்தான் பிரிவின்போது காஷ்மீர் சிக்கல் பெரிதாக எரிய ஆரம்பித்தது.

பல மன்னராட்சி சமஸ்தானங்கள்,
குறிப்பாக இன்றைக்கு பாகிஸ்தானில் உள்ள ஐதராபாத், ஜோத்பூர், ஜூனாகத் மற்றும் பஞ்சாப் பகுதியில் உள்ள சமஸ்தானங்கள் பாகிஸ்தானோடு இணைய வேண்டுமென்று ஜின்னா போன்றவர்கள் விரும்பியதாகவும், இதில் ஒரு சில பகுதிகளில் அதிக இஸ்லாமியர்கள் மக்கள் தொகை கொண்ட சமஸ்தானங்கள் ஆகும்.

குறிப்பாக ஜம்மு-காஷ்மீரை தன்னோடு இணைத்துக் கொள்ள வேண்டுமென்று பாகிஸ்தான் மும்முரம் காட்டியது.

ஆனால், ஜூனாகத் சமஸ்தானத்தில் பெரும்பான்மையானோர் இந்தியாவுடன் இணைய வேண்டுமென்ற விருப்பத்தின்படி இந்தியாவோடு இருந்துவிட்டது.

இந்த நிலையில் ஜின்னாவும், லியாகத் அலிகானும்
பாகிஸ்தானோடு சேர்ந்தால்தான் இஸ்லாமியருக்கு நல்லது என்று பிரச்சாரம் மட்டுமல்லாமல்,
வேறு சில நடவடிக்கைகளிலும் இறங்கினர்.

 அந்த வகையில் பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீரின் மீது படையெடுத்தது.
கரண்சிங்கின் தந்தையார் மன்னர் ஹரிசிங் இந்த சூழலில் இந்தியாவின் உதவியை நாடினார்.

ஷேக் அப்துல்லாவும் இஸ்லாமியரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் தன்னுடைய காய்களை போராட்டக் களத்தில் நகர்த்தினார்.

ஹரிசிங் கையறு நிலையில் இருந்தார். பாகிஸ்தான் இராணுவமும் நெருங்கிவிட்டது. ஹரிசிங்கிடம்
நேருவும், படேலும் நீங்கள் உதவி வேண்டும். இந்திய இராணுவத்தை அனுப்புங்கள் என்று அழைத்தால் அனுப்புவோம்.

 அதுமட்டுமல்லாமல், இந்தியாவோடு தான் இணைவோம் என்று சொல்லுங்கள்..
உங்களையும், உங்கள் சமஸ்தானத்தையும் இந்தியா பாதுகாக்கும் என்ற உத்தரவாதத்தையும் தருகிறோம் என்று பிரதமர் நேருவும், உள்துறை அமைச்சர் படேலும் கூறினர்.

கூறியவாறே ஹரிசிங்கையும், அவர் சமஸ்தானத்தையும் இந்திய அரசு காப்பாற்றியது.

அவரும் உறுதியளித்தவாறு
1947, அக்டோபர் 26ஆம் தேதி முறைப்படி இந்தியாவோடு இணைந்தார்.

அந்த வகையில் இன்றைக்கு நீக்கப்பட்டுள்ள சட்டப் பிரிவுகள் 370, 35A காஷ்மீரின் தனித்தன்மையை பாதுகாக்க இந்திய அரசு ஒத்துக்கொண்டது.

இதற்கான ஒப்பந்தங்கள் ஹரிசிங்கும்,
இந்திய அரசும் முறைப்படுத்தி கையொப்பமிட்டனர்.

இந்த பிரிவுகளை பின்னாட்களில் ரத்து செய்ய சொல்லி
ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்ததெல்லாம் உண்டு.

 இந்த நிலையில் பாகிஸ்தான் தன் எல்லைப் பக்கத்தில் உள்ள சில பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டு
ஆசாத் காஷ்மீர் என்று தன்னகத்தே வைத்துக் கொண்டுள்ளது.

நேருவின் ஆட்சிக் காலத்தில்
1964ஆம் ஆண்டில் சீனாவுடன் போர் ஏற்பட்ட காலத்தில் காஷ்மீரின் வடகிழக்குப் பகுதியில் சீனாவும் நுழைந்து ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது.

இதை பாகிஸ்தானும் அன்று ஆதரித்தது.

இந்த நிலையில் பண்டித நேரு காஷ்மீர் சிக்கலை ஐ.நா. மத்தியஸ்தத்திற்கு விட்டுவிட்டார்.
அன்றைய உள்துறை அமைச்சர் படேல் நேருவின் இந்த முடிவுக்கு மாறுப்பட்டார்.

 ஐ.நாவுக்கு இந்த பிரச்சனையை கொண்டு சென்றதில் இருந்து கிணற்றில் போட்ட கல்லாக ஒரு தீர்வு எட்டப்படாமல்
 சீனாவும், பாகிஸ்தானும் தங்களது விருப்பத்திற்கேற்றவாறு சிக்கல்களை உருவாக்கிக் கொண்டு வந்தது.

இடைப்பட்ட காலத்தில் பொதுவாக்கெடுப்பு என்று விவாதம் வந்தபோது,
பாகிஸ்தான் ஆசாத் காஷ்மீரில் இருந்து வெளியேறினால்தான் சாத்தியம் என்று இந்தியா ஐ.நாவில் தெரிவித்தது.

காஷ்மீர் அழகான அமைதியான பூமி. இன்றைக்கு கலவர பூமியாக மாறியதற்கு உலகப் புவியரசியலும் ஒரு காரணம்.

காஷ்மீர் பிரச்சனையின் விளைவாக 1980களில் பஞ்சாபிலும் சிக்கல்கள் கடுமையாக இருந்தன. காஷ்மீர் மக்கள் பலர் இந்தியாவுடன் இருக்கத் தான் பெரும்பாலும் விரும்புகின்றனர்.
யாசிம் மாலிக் போன்ற சிலர் வேறு திசையை நோக்கி அழைத்துச் செல்கின்றனர் என்றும் காஷ்மீரில் இருப்பவர்களே சொல்கின்றனர்.

 காஷ்மீர் பிரச்சனையில் ஒவ்வொருவரும் தவறான அணுகுமுறையில் நடத்திச் சென்றுவிட்டனர் என்பதே யதார்த்தம்.

காஷ்மீர் விவகாரத்தில் கண்டிப்பும் வேண்டும், அனுசரணையும் வேண்டும்.
அதுவே தீர்வுக்கு வழி.

இப்படி இடியாப்பச் சிக்கலில் காஷ்மீர் பிரச்சனையில் ஒரு விடியல் வந்தால் மகிழ்ச்சி. காஷ்மீர் திரும்பவும் அழகிய,
 அமைதியான பூமியாக திரும்பட்டும்.
இதுவே அனைவருடைய விருப்பம்.

கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.
05-08-2019.

No comments