கன்ரீனுக்குள் பதுங்கிக்கொண்ட சாம் மற்றும் சுமந்திரன்?


அவசரகாலச்சட்ட நீடிப்பு தொடர்பான வாக்கெடுப்பின் போது எதிர்க்க மறுத்து நாடாளுமன்ற உணவகத்தினில் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் அதன் பேச்சாளர் ஆகியோர் பதுங்கிக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.ஒருபுறம் ரணிலை மிரட்டினார் வெருட்டினார் என ஆதரவாளர்கள் பிரச்சாரங்களை முன்னெடுக்க மறுபுறம் வெளிப்படையாகவே ரணிலின் அடிமைகளாக வாழ்வதென்று முடிவே எடுத்துவிட்டார்களாவென்ற கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தமிழரின் இரத்தம் குடித்த ஓநாய்களெல்லாம் கூட்டமைப்பை விமர்சிக்க என்ன தகுதியுண்டு? என சி.சிறீதரன் சீறியுள்ளார்.

'தமிழ் மக்களின் இரத்தம் குடித்த ஓநாய்களெல்லாம் இன்று வடக்குக்கு வந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை விமர்சிக்கின்றனர். கூட்டமைப்பை விமர்சிக்க அவர்களுக்கு என்ன தகுதியுண்டு? என்னதான் வேஷம் போட்டாலும் தமிழ் மக்களின் கண்ணீர் அவர்களைச் சும்மாவிடாது.

அவசரகாலச் சட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றுவரும் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,அவசரகாலச் சட்டம் இனியும் தேவையில்லை. எனவே, அந்தச் சட்டத்தை மேலும் ஒரு மாதகாலத்துக்கு நீடிக்கும் யோசனைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிராகவே வாக்களிக்கும்' எனவும் தெரிவித்திருந்த போதும் பின்னர் பதுங்கிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலம் நீடிப்பதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் 40 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனடிப்படையில் குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 42 வாக்குகளும் எதிராக 2 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

யோசனைக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சிவஞானம் ஸ்ரீதரன் ஆகியோர் வாக்களித்துள்ளனர். அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒருமாத காலத்துக்கு நீடிப்பதற்கான ஜனாதிபதியின் விசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த 22ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்றின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக யோசனை இன்று சபையில் முன்வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாட்டில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் மற்றும் அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் காரணமாக அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில், அப்போதிலிருந்து தொடர்ந்தும் இது நீடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments